சென்னை : சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி விளையாடவுள்ள நிலையில், அந்த அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி இன்று களமிறங்கவுள்ளது. வழக்கமாகவே தோனி மீது வன்மத்தை கொட்டும் கவுதம் கம்பீர், சென்னை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து வீழ்த்துவதற்கு தீவிரமாக இருக்கிறார். ஏற்கனவே சிஎஸ்கே அணியை ஐபிஎல் இறுதிப்போட்டியில் வீழ்த்தி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தவர் கவுதம் கம்பீர்.

இதனால் கேகேஆர் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருவதால், இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த நிலையில் தோனி குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், நான் எப்போதும் வெற்றிபெறவே விரும்புவேன். என் மனநிலையில் அது என்றும் தெளிவாக இருக்கும். நட்பு, மரியாதை எல்லாமே அப்படியே தான் இருக்கிறது. ஆனால் களத்தில் நிற்கும் போது, நான் கேகேஆர் கேப்டனாகவும், அவர் சிஎஸ்கே அணி கேப்டனாகவும் இருப்போம்.
இதே கேள்வியை தோனியிடம் கேட்டாலும், அவரும் இப்படிதான் பதில் கூறுவார். ஓய்வறைக்கு செல்லும் போது வெற்றிபெற்ற அணியின் கேப்டனாகவே இருக்க விரும்புகிறேன். அதேபோல் என்னை பொறுத்தவரை இந்திய கிரிக்கெட் வரலாற்றில், தோனியை போல் வெற்றிகரமான ஒரு கேப்டன் யாருமே கிடையாது. இதன்பின்னரும் வேறு எந்த கேப்டனும் அந்த லெவலை தொடுவார்களா என்பது சந்தேகமே. ஏனென்றால் 3 ஐசிசி கோப்பைகள் என்பது சாதாரணம் அல்ல. இனி வெளிநாடுகளில் டெஸ்ட் தொடரை வெல்லலாம், அதிகமான டெஸ்ட் போட்டிகளில் வெல்லலாம்.
ஆனால் அவை எதுவும் 3 ஐசிசி கோப்பைகளுக்கு நிகராக இருக்காது. ஐபிஎல் தொடரை நான் ரசித்து விளையாடுவதற்கும் அதுதான் காரணம். தோனி தந்திரமாக செயல்படுவார் என்பது எனக்கு தெரியும். நிச்சயம் ஸ்பின்னர்களை எப்படி கையாள வேண்டும், அவர்களுக்கு என்ன ஃபீல்ட் செட் அமைக்க வேண்டும் என்பது தோனி நன்றாக தெரியும். அதேபோல் கடைசி வரை விட்டுக் கொடுக்காமல் போராடுவார்.
பேட்டிங்கிலும் நம்பர் 6 அல்லது நம்பர் 7ல் களமிறங்குவார். அவர் களமிறங்கும் போது கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவையென்றால் நிச்சயம் ஆட்டத்தை முடித்துவிடுவார். அதேநேரம், சிஎஸ்கே அணியின் ஒவ்வொரு வீரருக்கும் சவால் கொடுக்கும் வகையில் என்னிடம் பவுலர்கள் இருக்கிறார்கள். அதனால் அவரை விடவும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும். அவரை விட சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே தோனியை வீழ்த்த முடியும்.
ஏனென்றால் தோனி களத்தில் எப்போதும் ஆக்ரோஷமாக இருக்க மாட்டார். அதேபோல் கடைசி வரை வெற்றிக்காக போராடுவார் என்பதும் தெரியும். கடைசி ரன்னை அடிக்கும் வகையில் சென்னை அணியை வீழ்த்திவிட்டதாக நினைக்க கூடாது. சில அணிகள் தோல்விக்கு அருகில் சென்றாலே, அவர்கள் எளிதாக விட்டுக் கொடுத்துவிடுவார்கள். ஆனால் சென்னை அணி அப்படியான அணியல்ல என்று தெரிவித்துள்ளார்.