சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதிய 39வது லீக் போட்டியில் சிஎஸ்கே அணி 210 ரன்கள் குவித்தது.
முதலில் 200 ரன்களை கடப்பதே கடினம் என்ற நிலையில் தான் இருந்தது சிஎஸ்கே அணியின் பேட்டிங். ரஹானே, டேரில் மிட்செல் மற்றும் ஜடேஜா ஆகியோர் மோசமாக பேட்டிங் செய்து ரன் குவிக்காமல் அதிக பந்துகளை வீணடித்தனர். ஆனால், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - சிக்ஸர் மன்ன சிவம் துபே ஜோடி லக்னோ பந்துவீச்சை பந்தாடியது. அவர்களை கட்டுபடுத்த முடியாமல் நொந்து போனார் லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல்.

12வது ஓவரின் கடைசி பந்து முதல் கூட்டணி சேர்ந்த ருதுராஜ் - சிவம் துபே ஜோடி 20வது ஓவரில் 2 பந்துகள் மீதமிருக்கும் போதே பிரிந்தது. சிவம் துபே 66 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். பின்னர் பேட்டிங் செய்ய வந்த தோனிக்கு ஒரு பந்து மட்டுமே கிடைத்தது. அதிலும் ஃபோர் அடித்து லக்னோ அணியை சோதித்தார் தோனி.
இந்தப் போட்டியில் ரஹானே 1 (3), டேரில் மிட்செல் 10 (11), ஜடேஜா 17 (19) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். அவர் 3 ஃபோர், 7 சிக்ஸ் அடித்தார். அணியின் தூணாக நின்று ஆடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கடைசி வரை களத்தில் நின்று 60 பந்துகளில் 108 ரன்கள் குவித்திருந்தார். 12 ஃபோர், 3 சிக்ஸ் அடித்து கிளாசிக் ஆட்டத்தை ஆடி இருந்தார் ருதுராஜ். இது அவரது இரண்டாவது ஐபிஎல் சதம் ஆகும். தோனி ஒரு பந்தில் 4 ரன் எடுத்தார்.
சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. லக்னோ அணியில் மாட் ஹென்றி, மொஹ்சின் கான் மற்றும் யாஷ் தாக்குர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.