லக்னோ : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய 2024 ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மோசமாக தன் விக்கெட்டை பறி கொடுத்தார்.
இந்தப் போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரஹானே, ரச்சின் ரவீந்திரா துவக்கம் அளித்தனர். ரச்சின் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அதை அடுத்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினார்.

டாப் ஆர்டரில் அதிக ரன் குவிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்த நிலையில் யாஷ் தாக்குர் வீசிய அவுட்சைட் ஆஃப் பந்தை அடிக்க முயற்சி செய்தார். ஆனால், பந்து எட்ஜ் ஆனது. லக்னோ அணியின் விக்கெட் கீப்பரும், கேப்டனுமான கே எல் ராகுல் அந்த பந்தை கேட்ச் பிடித்தார்.
ருதுராஜ் கெய்க்வாட் 13 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பின் ரஹானே 36 ரன்கள் எடுத்தும், சிவம் துபே 3 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். ஜடேஜா மட்டுமே பொறுப்பாக ஆடினார். இம்பாக்ட் வீரராக அனுப்பப்பட்ட சமீர் ரிஸ்வி படுமோசமாக அவுட் ஆனார். க்ருனால் பாண்டியா வீசிய பந்தை அடிக்க கிரீஸை விட்டு சில அடி தூரம் முன்னேறி வந்த அவர் பந்தை தவற விட்டார். கே எல் ராகுல் மிக எளிதாக அவரை ஸ்டம்பிங் செய்தார்.
அதன் பின் ஜடேஜா அரைசதம் அடித்த நிலையில், மொயீன் அலி 20 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். கடைசி 2 ஓவர்களில் பேட்டிங் செய்த தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் குவித்து சிஎஸ்கே அணியை காப்பாற்றினார். சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
எப்போதும் பொறுப்பாக ஆடும் ருதுராஜ் கெய்க்வாட் இந்தப் போட்டியில் செய்த தவறால் சிஎஸ்கே விக்கெட் வீழ்ச்சியை சந்தித்தது.