மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கின் போது கடைசி நான்கு பந்துகள் மட்டுமே பேட்டிங் செய்த தோனி, மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை பழி தீர்த்ததாக ரோஹித் சர்மா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ரஹானே 5 ரன்களிலும், ரச்சின் 21 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த ருதுராஜ் கெய்க்வாட் 40 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். சிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து இருந்தார். 19.2வது ஓவரில் டேரில் மிட்செல் 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி நான்கு பந்துகள் மீதமிருந்த போது தோனி களத்துக்கு வந்தார். கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அது மிகப் பெரிய தவறாக அமைந்தது.
சிவம் துபே ஸ்பின்னர்களின் ஒவர்களில் எளிதாக சிக்ஸ் அடிப்பார் என்பதால் அவர் பேட்டிங் செய்ய வந்த பின் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஸ்பின்னர்களுக்கு ஓவர் கொடுக்கவில்லை. ஆனல், ஸ்பின்னர்களுக்கு பதிலாக பந்து வீச கூடுதல் பந்துவீச்சாளர் தேவை என்பதால் பாண்டியாவே பந்து வீசினார்.
அவரது முதல் ஓவரில் சிவம் துபே மூன்று ஃபோர் அடித்து 15 ரன்கள் குவித்து இருந்தார். அடுத்த ஓவரில் பாண்டியா 2 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் எடுத்து இருந்தார். அதன் காரணமாக தானே கடைசி ஓவரை வீசலாம் என நினைத்து அவர் கடைசி ஓவரில் பந்து வீசினார். முதல் ஒரு பந்தில் ஃபோர் மற்றும் இரண்டு வைடுகள் கொடுத்த பாண்டியா இரண்டாவது பந்தில் டேரில் மிட்செல் விக்கெட்டை சாய்த்தார்.
ஹர்திக் பாண்டியா சிறப்பாக பந்து வீசுவதாக அனைவரும் நினைத்த நிலையில் தோனி கடைசி ஓவரின் நான்கு பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தார். மூன்று சிக்ஸ் மற்றும் இரண்டு ரன்கள் சேர்த்து கடைசி நான்கு பந்துகளில் 20 ரன்கள் குவித்தார் தோனி.
இதை அடுத்து தோனி, ஹர்திக் பாண்டியாவை பழி தீர்த்து விட்டதாக ரோஹித் சர்மா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை ரோஹித் சர்மாவிடம் இருந்து தட்டிப் பறித்ததாக கருதும் ரோஹித்தின் ரசிகர்கள் இது போன்ற கருத்துக்களை கூறி வருகின்றனர்.