சென்னை: 2025 ஐபிஎல் தொடரின் பரபரப்பான தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த போட்டி மார்ச் 23 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி சென்னைக்கு வந்து சேர்ந்தது.
மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஹர்திக் பாண்டியாவும் வந்தார். அது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு ஒரு ஐபிஎல் போட்டியில் ஆட தடை இருப்பதால் அவரால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாது. எனினும், அவர் தனது அணியுடன் சென்னை வந்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, கடந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டது.
இதனால் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அவர் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னைக்கு வந்து இருக்கிறார். தனது அணியுடன் கேப்டனாக எப்போதும் இருப்பேன் என்பதை வெளிக்காட்டி இருக்கிறார்..
ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்த இருக்கிறார். சூர்யகுமார் இதற்கு முன் ஒரே ஒரு ஐபிஎல் போட்டியில் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, அந்த அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று தந்தார். அவரை நீக்கிவிட்டு, 2024 ஆம் ஆண்டு சீசனுக்கு முன்பு ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி "எல் கிளாசிகோ" என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு அணிகளும் பல ஆண்டுகளாக ரசிகர்களுக்கு மறக்க முடியாத போட்டிகளை அளித்துள்ளன. வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் இந்த இரண்டு அணிகளும் எப்படி விளையாடப்போகின்றன என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.