மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் செய்த மாற்றத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. பும்ராவை பந்து வீச வைத்தும் எந்த பயனும் இல்லாமல் போனது.
மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. சிஎஸ்கே அணியின் துவக்க வீரராக களமிறங்கி வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் திடீரென தனக்கு பதிலாக ரஹானேவை துவக்க வீரராக அனுப்பி வைத்தார்.

ரஹானே 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து துவக்க வீரராக வந்த ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி ஆட்டம் ஆடத் துவங்கினார். இந்த சீசனில் இதுவரை ஆடிய போட்டிகளில் எல்லாம் அவர் நிதான ஆட்டம் ஆடுவதாக விமர்சனம் இருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 150க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்து ரன் குவித்தார்.
ருதுராஜ் கெய்க்வாட் இதற்கு முன் அதிக சிக்ஸ் அடித்து பார்த்திராத நிலையில் இந்தப் போட்டியில் ஐந்து சிக்ஸ் அடித்தார். 40 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து 15.2வது ஓவரில் ஆட்டமிழந்தார் ருதுராஜ். இடையே சிவம் துபே - ருதுராஜ் கெய்க்வாட் ஜோடியை பிரிக்க பும்ராவை பந்து வீச வைத்தார் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா.
ஆனால், பும்ரா ஓவர்களில் பவுண்டரி அடிக்க முயற்சி செய்யாமல் சாமர்த்தியமாக ஆடினார் ருதுராஜ் கெய்க்வாட். மற்ற ஓவர்களில் அதிரடியாக ரன் குவித்ததால் சிஎஸ்கே அணியின் ரன் ரேட் எகிறியது. சிவம் துபேவுக்கு இணையாக, ருதுராஜ் கெய்க்வாட் ஸ்ட்ரைக் ரேட் 172 ஆக இருந்தது. சிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 173 ஆக இருந்தது. கடைசி நான்கு பந்துகளில் மட்டும் பேட்டிங் செய்த தோனி மூன்று சிக்ஸ் அடித்து 20 ரன்கள் குவித்து சிஎஸ்கே அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடக்க காரணமாக இருந்தார்.