மும்பை: ஐபிஎல் வரலாற்றிலேயே யாரும் எதிர்பார்க்காத ஒரு பிரம்மாண்ட வெற்றியை மும்பை மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிவு செய்துள்ளது. பல நட்சத்திர வீரர்கள் காயத்தால் விலகிய நிலையில், சிதைந்து போய் இருந்த சிஎஸ்கே அணியை ஒரு தனி மனிதனாக நின்று சஞ்சு சாம்சன் மீட்டெடுத்த விதம் கிரிக்கெட் உலகையே வியக்க வைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்திலேயே சஞ்சு சாம்சன் அலை வீழ்த்தி இருக்கிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் 33-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பே சிஎஸ்கே அணிக்கு ஏகப்பட்ட சோதனைகள் இருந்தன. தோனி உட்பட பல முன்னணி வீரர்கள் விளையாடாத நிலையில், சரியான 'பிளேயிங் 11' அணியைத் தேர்வு செய்யவே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தடுமாறினார். ஆனால், இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சஞ்சு சாம்சன் என்ற ஒற்றை அலை மும்பை அணியை மூழ்கடித்து விட்டது.

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியில், சஞ்சு சாம்சனைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகவும் கடினமாக இருந்ததால், சிஎஸ்கே அணியின் வேறு எந்த வீரரும் 25 ரன்களைக் கூடத் தாண்டவில்லை. ஆனால், ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மலைபோல நிலைத்து நின்ற சஞ்சு சாம்சன், மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 54 பந்துகளைச் சந்தித்த அவர், 101 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது அதிரடியால் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் என்ற மலைப்பூட்டும் இலக்கை எட்டியது.
இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை பந்துவீச்சாளர்களின் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் சீட்டுக்கட்டுகளைப் போலச் சரிந்தது. சூர்யகுமார் யாதவ் 36 ரன்களும், திலக் வர்மா 37 ரன்களும் எடுத்தனர். இவர்கள் இருவரைத் தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி அளித்தனர். இறுதியில் மும்பை அணி 19 ஓவர்களில் வெறும் 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.

இதன் மூலம் 103 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாபெரும் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. ஐபிஎல் வரலாற்றில் ரன்கள் அடிப்படையில் சிஎஸ்கே அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவே ஆகும். அதே சமயம், ஐபிஎல் வரலாற்றிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி சந்தித்த மிக மோசமான தோல்வி இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு அணிகளிலும் சேர்த்து சஞ்சு சாம்சனைத் தவிர வேறு எந்த வீரரும் 40 ரன்களைக் கூடத் தாண்ட முடியாத ஒரு கடினமான ஆடுகளத்தில், அவர் அடித்த இந்த சதம் காலத்திற்கும் பேசப்படும் ஒரு இன்னிங்ஸாக மாறிவிட்டது. இந்த இமாலய வெற்றியால் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.