CSK vs MI: இரு ஜாம்பவான்களும் ஆடுவார்களா? தோனி, ரோஹித் குறித்து வெளியான முக்கிய தகவல்
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் மே 2 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனல் பறக்க நடைபெற உள்ளது. ஆனால், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் மனதிலும் தற்போது எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி ஒன்று தான். காயம் காரணமாக தவித்து வரும் சிஎஸ்கே அணியின் மூத்த வீரர் தோனி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா ஆகியோர் போட்டியில் களமிறங்குவார்களா? ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ள இந்த விவகாரம் குறித்து இரு அணிகளின் பயிற்சியாளர்களும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா, தொடைப்பகுதி தசைப்பிடிப்பு காயம் காரணமாக கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார். இதன் காரணமாக கடந்த 4 போட்டிகளில் அவர் விளையாடவில்லை. நடப்பு 2026 சீசனில் அவர் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். இன்றைய போட்டியில் அவர் விளையாடுவாரா என்பது குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மகேல ஜெயவர்தனே, "ரோஹித் சர்மா காயத்தில் இருந்து வேகமாக குணமடைந்து வருகிறார். அவர் மீண்டும் களத்திற்கு திரும்ப கடுமையாக உழைக்கிறார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த வலைப்பயிற்சியிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டார்".

"மருத்துவ குழுவினர் ரோஹித் சர்மாவின் உடல்நிலையை தினசரி அடிப்படையில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர் எந்த அளவிற்கு தகுதியுடன் இருக்கிறார் என்பதை பரிசோதித்து, போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு தான் அவர் ஆடும் லெவனில் இடம்பெறுவாரா என்பது குறித்த இறுதி முடிவை நாங்கள் எடுப்போம்" என தெரிவித்துள்ளார்.
மறுபுறம், சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த 3 வாரங்களாக கெண்டைக்கால் காயத்தால் அவதிப்பட்டு வருவது சென்னை ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடப்பு தொடரில் அவர் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அவரது வருகை குறித்து சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி கூறுகையில் -
"தோனி காயத்தில் இருந்து மிகச் சிறப்பாக மீண்டு வருகிறார். விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் அவரது திறமை குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை, அவர் முழு பார்மில் உள்ளார். ஆனால், போட்டியின் கடைசி கட்டத்தில் 1 அல்லது 2 ரன்களுக்காக விக்கெட்டுகளுக்கு இடையே மிக வேகமாக ஓட வேண்டியிருக்கும். அந்த ஓட்ட வேகத்தை தொடர்ந்து பராமரிப்பதில் தான் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறோம்" என விளக்கினார்.
மேலும், "தமது காயம் முழுமையாக குணமடைந்துவிட்டதாக தோனி எப்போது முழுமையாக உணர்கிறாரோ, அப்போது அவரே விளையாடத் தயார் என்று எங்களுக்கு சிக்னல் கொடுப்பார். போட்டியில் களமிறங்கும் முடிவை அவர் மட்டுமே எடுப்பார். அந்த ஒற்றை சிக்னலுக்காக தான் ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியும் காத்துக்கொண்டிருக்கிறது. இன்றைய போட்டியிலோ அல்லது அடுத்த போட்டியிலோ அவர் நிச்சயம் களமிறங்குவார்" என ஹசி நம்பிக்கையுடன் தெரிவித்தார். ரோஹித் மற்றும் தோனி ஆகிய இரு ஜாம்பவான்களும் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவது குறித்த இறுதி முடிவு ஆட்டம் தொடங்கும் முன்பு தான் தெரியவரும் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications
