மும்பை: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு எதிராக விளையாடும் போது கொஞ்சம் அசந்தாலும் ஆட்டத்தை மாற்றிவிடுவார் என்று மும்பை முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். தோனி நீண்ட ஆண்டுகளாக கேப்டனாக இருந்து ஏராளமான கோப்பைகளை வென்றிருக்கிறார் என்று கூறிய ரோஹித் சர்மா, ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கூட சிஎஸ்கே பக்கம் திருப்பிவிடுவார் என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் நாளை மறுநாள் வான்கடே மைதானத்தில் மும்பை அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. இதுவரை மும்பை அணி விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. அதேபோல் சிஎஸ்கே அணி இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான சிஎஸ்கே விளையாடவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி களமிறங்குவதால், மும்பை அணியால் அவ்வளவு எளிதாக வெற்றி பெற முடியாது என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் சிஎஸ்கே அணியும் இளம் வீரர்களான ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே உள்ளிட்டோரை அணிக்குள் கொண்டு வந்துள்ளது.
இதனால் சிஎஸ்கே அணியின் பிளேயிங் 12ஐ கணிப்பதே மும்பை அணிக்கு பெரும் திண்டாட்டமாக இருக்கும். அதேபோல் ஐபிஎல் ஜாம்பவான்களான தோனி - ரோஹித் சர்மா நேருக்கு நேர் மோதுவது இதுவே கடைசி ஆட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் மும்பை - சிஎஸ்கே அணிகளின் ரசிகர்கள் கூடுதல் ஆக்ரோஷமாக இருப்பார்கள் என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தோனி குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், தோனி நீண்ட ஆண்டுகளாக கேப்டனாக செயல்பட்டு வருகிறார். கேப்டனாக ஏராளமான வெற்றிகளை பெற்றதோடு, கோப்பைகளையும் வென்றிருக்கிறார். அதனால் தோனிக்கு எதிராக விளையாடும் போது கொஞ்சம் கூட ரிலாக்ஸாக இருக்க முடியாது. எவ்வளவு எளிதாக எந்த போட்டியில் இருந்து தோனி பிடியை விட்டுவிட மாட்டார்.
தோனிக்கு எதிராகவும், சிஎஸ்கே அணிக்கு எதிராகவும் விளையாடும் போது ஒவ்வொரு நொடியும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கடைசி நிமிடத்தில் கூட ஆட்டத்தை தோனி மாற்றிவிடுவார் என்று தெரிவித்தார். தொடர்ந்து தனது பெயரில் வான்கடே மைதானத்தில் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது தொடர்பாக பேசும் போது, அந்த உணர்வை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
இதற்கான எப்போதும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்று தெரியாது. ஆனால் இதுபோன்ற மரியாதை கிடைக்கும் என்று கனவிலும் கூட நினைத்ததில்லை என்று தெரிவித்துள்ளார். இதனை மும்பை டி20 லீக் தொடரின் போது ரோஹித் சர்மா பகிர்ந்துள்ளார்.