மும்பை : சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள ருதுராஜ் கெய்க்வாட்-ற்கு மும்பை அணியின் சீனியர் வீரரான சூர்யகுமார் யாதவ் வாழ்த்து கூறியுள்ளார்.
சிஎஸ்கே அணியின் கேப்டனாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தோனி கேப்டன்சியில் இருந்து விலக, ஐபிஎல் ட்விட்டர் பக்கத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. சிஎஸ்கே அணி தரப்பில் இருந்து அறிவிப்பு வெளி வராமல், ஐபிஎல் நிர்வாகத்திடம் இருந்து வந்த போது, இந்த முடிவு முன்னதாகவே எடுக்கப்பட்டதாக புரிய வருகிறது.

2019ஆம் ஆண்டில் இருந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட், சென்னை அணியின் எதிர்காலத்திற்கான வீரராக பார்க்கப்பட்டு வந்தார். ஜடேஜாவுக்கு ஏற்கனவே வயதாகிவிட்ட நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் மட்டுமே கேப்டனாக பார்க்கப்பட்டார். அதற்கேற்ப மகாராஷ்டிரா அணியின் கேப்டனாகவும் ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டது பலரையும் ஈர்த்தது. அதேபோல் இந்திய அணியை வழிநடத்திய ஆசிய விளையாட்டு போட்டிகளில் வென்று அசத்தினார்.
இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்களே ருதுராஜ் கெய்க்வாட்-க்கு வாழ்த்து கூறி வருகின்றனர். சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் நட்சத்திர வீரர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில் மும்பை அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நீ மிகப்பெரிய ஜாம்பவானின் இடத்தை நிரப்ப வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் உனது அமைதியான குணத்தின் மூலமாக சிஎஸ்கே அணியின் புகழையும், பாரம்பரியத்தையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வாய் என்ற நம்பிக்கை உள்ளது. அதிர்ஷ்டமும் உன்னுடன் இருக்க வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட 5 நிமிடத்திலேயே மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் வாழ்த்தி இருக்கிறார். ஆனால் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாகியும் ஹர்திக் பாண்டியா பற்றி இதுவரை சூர்யகுமார் யாதவ் இதுவரை எந்த கருத்தும் கூறவில்லை. இதன் மூலமாக மும்பை அணியின் கேப்டன்சி விவகாரத்தால் கோஷ்டி மோதம் ஏற்பட்டுள்ளது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.