கராச்சி: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு எதிராக பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலுமே மோசமாக செயல்பட்டது.
இதன் காரணமாக இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. இதற்கு பலரும் பாகிஸ்தான் அணி செய்த தவறை பட்டியலிட்டு பல முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பாகிஸ்தான் அணியில் பல மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். இந்த நிலையில் பாகிஸ்தான் ஊடகம் ஒன்று, இந்தியா மீது ஒரு வினோத குற்றச்சாட்டை வைத்திருக்கிறது. இதன் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
அதில் பாகிஸ்தானை தோற்கடிக்க இந்தியாவை சேர்ந்த 22 மந்திரவாதிகள் இணைந்து பாகிஸ்தான் வீரர்களுக்கு சூனியம் வைத்திருப்பதாக அந்த ஊடகம் தெரிவித்தது. அதாவது ஒரு பாகிஸ்தான் வீரருக்கு இரண்டு மந்திரவாதிகள் என 11 பாகிஸ்தான் வீரர்களுக்கும் 22 மந்திரவாதிகளை அழைத்து துபாய் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் சூனியம் செய்ததாக அந்த ஊடகம் குற்றஞ்சாட்டி உள்ளது.
இந்த மந்திரவாதிகளை பாகிஸ்தானுக்கு அழைத்து வர முடியாது என்பதால்தான் போட்டியை துபாயில் நடத்த பிசிசிஐ வற்புறுத்தியதாக அந்த ஊடகம் தெரிவித்து இருக்கிறது. பாகிஸ்தான் ஊடகம் வைத்திருக்கும் இந்த குற்றச்சாட்டு சமூக வலைத்தளத்தில் சிரிப்பலையை ஏற்படுத்திருக்கிறது.
பாகிஸ்தான் ஊடகம் இவ்வளவு மோசமாக நடந்து கொள்ளுமா என்று பலரும் கேள்வி கேட்டுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய ரசிகர்கள் மந்திரவாதிகளை நாங்கள் அழைத்து வரவில்லை. மாறாக ஒவ்வொரு வீரர்களுக்கும் எந்த திட்டத்தை தீட்டி அவர்களை ஆட்டம் இழக்க வைக்க வேண்டும் என கடும் பயிற்சி எடுத்து பாகிஸ்தானில் வீழ்த்தியதாக விளக்கம் அளித்துள்ளனர். இது போல் பாகிஸ்தான் ஊடகங்களும் அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பேசி வந்தால் பாகிஸ்தானை யாராலையும் காப்பாற்ற முடியாது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.