மும்பை : 2023 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணித் தேர்வில் கேப்டன் ரோஹித் சர்மா பெரிய சிக்கலை எதிர்கொள்ள இருப்பதாக முன்னாள் வீரர்கள் கூறத் துவங்கி இருக்கின்றனர்.
இந்த முறை இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ற சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்யாமல் விட்டு விட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இந்திய அணி அறிவிப்பு : 2023 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.. அந்த அணியில் சுழற் பந்துவீச்சாளர்களாக ஜடேஜா, அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் மட்டுமே இடம்பெற்று இருந்தனர். இவர்கள் மூவரும் இடது கை சுழற் பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வலது கை ஸ்பின்னர் எங்கே? : வலது கை சுழற் பந்துவீச்சாளராக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று வந்த சாஹலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்திய ஆடுகளங்களில் நடக்கும் தொடர் என்பதால் டெஸ்ட் அணியில் இடம் பெற்று வரும் மூத்த வீரர் அஸ்வினுக்கு அணியில் இடம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அவருக்கும் அணியில் இடம் அளிக்கப்படவில்லை.
தேவையில்லாத முடிவு : இந்திய ஆடுகளங்களில் கடந்த காலங்களில் கோலோச்சிய சுழற் பந்துவீச்சாளர்களான அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் மற்றும் அஸ்வின் ஆகிய அனைவருமே வலது கை சுழற் பந்துவீச்சாளர்கள் தான். அவர்களை வைத்து தான் இந்திய அணி, இந்திய களத்தில் பல குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றுள்ளது. ஆனால், அதை மறந்து தற்போது ரோஹித் சர்மா தேவையில்லாத முடிவை எடுத்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
சாஹல் நிலை: தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் சுழற் பந்துவீச்சாளரான சாஹலை அணியில் தேர்வு செய்யாதது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அவர் எந்த காரணமும் இன்றி புறக்கணிக்கப்பட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி விவரம் : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, சூரியக்குமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஷர்துல் தாக்குர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ்.