மும்பை: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள கிரிக்கெட் வீரர்கள் அதிக ரன்களை குவித்துள்ள வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மா, டேவிட் வார்னர் ஆகியோரை பின்னுக்கு தள்ளி வங்கதேச வீரர் ஒருவரும் முதலிடத்தில் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை அகமதாபாத் மைதானத்தில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி களமிறங்கவுள்ளது. கடந்த முறை இறுதிப்போட்டியில் ஆடிய இரு அணிகளும் இம்முறை முதல் போட்டியிலேயே மோதவுள்ளன. இதனால் நியூசிலாந்து அணி பதிலடி கொடுத்து உலகக்கோப்பையை பிரம்மாண்டமாக தொடங்கும் என்று பார்க்கப்படுகிறது.

இதனிடையே உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் எந்த பேட்ஸ்மேன் விளாசுவார், எந்த பவுலர் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்று ரசிகர்கள் கணிப்பை வெளியிட்டு வருகின்றனர். அதேபோல் தற்போது உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வீரர்களில் எந்த வீரர் அதிக ரன்களை விளாசி இருக்கிறார் என்ற விவாதமும் தொடங்கியது. அந்த வகையில் பலரும் 3 உலகக்கோப்பை ஆடிய விராட் கோலியின் பெயரையும், கேப்டன் ரோகித் சர்மாவின் பெயரையும் கூறி வந்தனர்.
ஆனால் ஆச்சரியமளிக்கும் வகையில் தற்போதைய வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலிடத்தில் உள்ளார். 29 இன்னிங்ஸ்களில் 1147 ரன்களும் விளாசி முதலிடத்தில் உள்ளார். அதேபோல் இரண்டாமிடத்தில் 26 இன்னிங்ஸ்களில் 1030 ரன்களை விளாசி விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் 18 இன்னிங்ஸ்களில் 992 ரன்கள் விளாசி மூன்றாவது இடத்திலும், 17 இன்னிங்ஸ்களில் 978 ரன்களை விளாசி ரோகித் சர்மா 4வது இடத்திலும், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 22 இன்னிங்ஸ்களில் 911 ரன்களையும் விளாசி 5வது இடத்திலும் உள்ளார்.