மும்பை: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் டேல் ஸ்டெயின் இருவரும் மாறி மாறி புகழ்ந்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் 5 முறை உலகக்கோப்பை வென்ற கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி சொந்த மண்ணில் நடக்கும் உலகக்கோப்பை தொடரில் களமிறங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இங்கிலாந்து அணியுடனான பயிற்சி போட்டியில் இந்திய அணி களமிறங்கிய நிலையில், மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது.

இந்த ஆட்டம் கைவிடப்பட்டாலும், உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி வீரர்கள் சிறப்பாக தயாராகியுள்ளனர். ஏற்கனவே ஆசியக் கோப்பையை இந்திய அணி வென்ற நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்திய அணி வென்றது. இந்த இரு தொடர்களிலும் இந்திய அணி வீரர்கள் சிறந்த ஃபார்மை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா பாகிஸ்தான் அணிக்கு முதல் போட்டியை தவிர்த்து மற்ற அனைத்து போட்டிகளிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை குவித்து சாதனையையும் படைத்தார். இந்த நிலையில் ரோகித் சர்மாவின் பிரத்யேக் நேர்காணல் வீடியோ ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் ரோகித் சர்மாவிடம், நீங்கள் எதிர்கொண்டதிலேயே மிகவும் கடினமான பந்துவீச்சாளார் யார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா, தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தான் நான் எதிர்கொண்டதில் அதிகம் கஷ்டப்பட்ட பந்துவீச்சாளர்.
140 கிமீ வேகத்தில் பந்துவீசினாலும் அவரிடம் ஸ்விங் மட்டும் எப்போதும் குறையாது. எந்த வேகத்தில் வீசினாலும் அவரின் லைன் மற்றும் லெந்த் மாறியதே இல்லை என்று தெரிவித்துள்ளார். அதேபோல் டேல் ஸ்டெயினிடம், நீங்கள் எந்த பேட்ஸ்மேனுக்கு பந்துவீசும் போது அதிக சிரமத்தை சந்தித்தீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டேஸ் ஸ்டெயின், ரோகித் சர்மா என்று பதில் அளித்துள்ளார். இரு ஜாம்பவான் வீரர்களும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பதில் அளித்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.