டர்பன்: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தொடங்கவுள்ள நேரம் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவடைந்த நிலையில், இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ், ஒருநாள் அணிக்கு கேஎல் ராகுல் மற்றும் டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா என்று 3 அணிகளுக்குள் 3 கேப்டன்களை அறிவித்து பிசிசிஐ அதிர்ச்சியை கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாட ரஹானே உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டு ஒரு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 40க்கும் அதிகமான வீரர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இதில் முதலில் டி20 கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 14ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த நிலையில் இந்திய ரசிகர்கள் பார்க்கும் வகையில் போட்டியின் நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 10ஆம் தேதி டர்பனில் நடக்கவுள்ள போட்டி இரவு 7.30 மணிக்கும், டிசம்பர் 12ஆம் தேதி செண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டி இரவு 8.30 மணிக்கும், டிசம்பர் 14ஆம் தேதி நடக்கவுள்ள கடைசி டி20 போட்டி ஜொகன்னஸ்பர்க் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டி இரவு 8.30 மணிக்கும் நடக்கவுள்ளது.
இந்த போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. அதேபோல் ஓடிடியை பொறுத்தவரை ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரசிகர்களை மனதில் வைத்து இந்திய நேரப்படி ஆட்டத்தை தொடங்குவதற்காக தென்னாப்பிரிக்கா மாலை 6 மற்றும் 7 மணிக்கு போட்டிகளை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.