டெல்லி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடுவது எவ்வளவு முக்கியம் என்பதை வெளிநாட்டு வீரர்கள் நன்றாகவே உணர்ந்து இருக்கிறார்கள். ஏனென்றால் ஒரு போட்டியில் மிஸ் செய்தால் கூட அவர்கள் ஒரு மாதத்தில் சம்பாதிக்கும் தொகையை இழக்க நேரிடும்.
இதனால் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் நேற்று இரவு ஜோகனஸ்பர்கில் இருந்து டெல்லி வந்து அடைந்தார்கள். கிட்டத்தட்ட 13 மணி நேர விமான பயணத்திற்கு பிறகு தென்னாப்பிரிக்க வீரர்கள் ஆண்ரிச் நோக்கியா, டேவிட் மில்லர், மற்றும் ரூசோவ் ஆகியோர் இன்று காலை தான் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க டெல்லியில் களமிறங்கி இருந்தார்கள்.

ஆனால் கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காமல் நேராக மைதானத்திற்கு வந்து பயிற்சியில் ஈடுபட்ட தென் ஆப்பிரிக்கா வீரர்கள் போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக டெல்லி அணியின் பந்துவீச்சாளர் நோக்கியா 4 ஓவர்கள் வீசி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதேபோன்று ரூசோவ் தனது முதல் பந்தில் ராகுல் திவாட்டியாவின் அபார கேட்சால் ஆட்டம் இழந்தார்கள்.
எனினும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது தென்னாப்பிரிக்காவின் அதிரடி வீரர் டேவிட் மில்லர் தான். வெறும் 16 பந்துகளை எதிர்கொண்ட டேவிட் மில்லர், 31 ரன்களை சேர்த்துள்ளார். இதில் இரண்டு பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். டேவிட் மில்லருக்கு கொஞ்சம் கூட களைப்பாக இல்லையா என்று கவாஸ்கர் உள்ளிட்ட கிரிக்கெட் வர்ணனையாளர்கள் ஆச்சரியமாக கேட்டனர்.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்துள்ள டேவிட் மில்லர் பயணக் களைப்புக்கு எல்லாம் நான் நேரமே கொடுக்கவில்லை. இன்று முதல் போட்டியில் விளையாடி வெற்றி பெற்றதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர் இலக்கு எங்கள் கைக்கு எட்டும் தூரம் தான் இருந்தது. வெறும் மூன்று சிக்ஸர்கள் அல்லது நான்கு பவுண்டரிகளில் ஆட்டம் மாறிவிடும் என்று எனக்கு நன்றாக தெரியும்.
அதனால் நான் என் வாய்ப்புக்காக காத்திருந்து பிறகு ரன்களை அடித்தேன். கடந்த ஆண்டிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். இந்த சீசனிலும் எங்களுக்கு நல்ல உத்வேகம் ஆரம்பத்திலே கிடைத்துவிட்டது. எங்கள் அணியின் நடுவரிசையில் சில அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். ராகுல் திவாத்தியா, ரஷீத் கான் போன்றோர் கீழ் வரிசையில் இருக்கிறார்கள்.

எப்போதும் பெரிய இலக்கை துரத்தும் போது முதலில் பதற்றம் ஏற்படும். ஆனால் நாம் அமைதியாக இருக்க வேண்டும். இதனை தான் நாங்கள் செய்து வருகிறோம். எங்கள் அணியில் நிம்மதியான சூழல் நிலவுகிறது.சில சமயம் ஆட்டத்தில் அனல் பறக்கும் போது கொஞ்சம் டென்ஷனாக இருக்கும். ஆனால் அது எல்லாம் ஆட்டத்தில் ஒரு பகுதியாக நாங்கள் கருதுகிறோம் என்று குஜராத் அணி நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் கூறியுள்ளார்.