டெல்லி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணி பஞ்சாப் அணியிடம் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரை விட்டு முதல் அணியாக வெளியேறியது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் டேவிட் வார்னர், பஞ்சாப் அணியை நாங்கள் குறிப்பிடத் தகுந்த இலக்கில் தடுத்து நிறுத்துவோம் என எதிர்பார்த்தேன்.

ஆனால் அவர்கள் கொஞ்சம் கூடுதல் ரன்களை எடுத்து விட்டார்கள். பிராப்சிமரன் பேட்டிங் பாராட்டத்தக்க வகையில் இருந்தது. மேலும் நாங்கள் சில கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டோம். அது எங்கள் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. நாங்கள் பேட்டிகள் நல்ல தொடக்கத்தை அளித்தோம்.
ஆனால் அதன் பிறகு 30 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழப்பதெல்லாம் உங்களுக்கு தோல்வியை கொடுக்கும். தன்னம்பிக்கையுடனும் பெருமையுடனும் விளையாட வேண்டும். களத்திற்கு வரும்போது சுதந்திரமாக விளையாடுங்கள். இது நிச்சயமாக எங்களுக்கு ஒரு ஏமாற்றமான ஆட்டமாக அமைந்துவிட்டது. நாங்கள் அளித்த தொடக்கத்தில் இந்த போட்டியில் நாங்கள் வென்றிருக்க வேண்டும்.
இன்றைய ஆட்டத்தில் நாங்கள் சரியான அணியை தேர்ந்தெடுத்தோம் என நம்புகிறேன். நடு ஓவர்களில் நான்கு ஐந்து விக்கெட்டுகளை இழப்பதெல்லாம் மிகவும் தவறு. ஐபிஎல் போன்ற தொடரில் இப்படி விளையாடுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று வார்னர் கோபமாக கூறியுள்ளார். தற்போது சிஎஸ்கே அணியுடன் கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.