சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியிடம் சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து ஏழாவது முறையாக டெல்லி அணி தோல்வி தழுவி இருக்கிறது. இதன் மூலம் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை டெல்லி அணி ஏறக்குறைய இழந்து விட்டது.
இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி 15 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்கள். சிஎஸ்கே அணி இன்னும் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்வதோடு முதல் இரண்டு இடத்தை பிடித்து விடும்.

இந்த நிலையில் இந்தத் தோல்வி குறித்து பேசிய கேப்டன் வார்னர், டெல்லி அணி வீரர்களை கடுமையாக சாடி இருக்கிறார். பவர் பிளேவில் நாங்கள் மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து விட்டோம். அப்போதே எங்களுக்கு ஆட்டம் முடிந்து விட்டது. முதல் ஓவரிலே விக்கெட்டை இழக்கும் தவறை நாங்கள் நடப்பு சீசனில் ஐந்து அல்லது ஆறு முறை செய்து விட்டோம்.
அதுவும் டி20 கிரிக்கெட்டில் ரன் அவுட் ஆவது என்பது நமது விக்கெட்டை நாமே எதிரணிக்கு கொடுப்பது போல் ஆகும். 168 ரன்கள் என்பது எடுக்க கூடிய இலக்கு தான் நாங்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்து இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை நின்று விளையாடி இருந்தால் நிச்சயம் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கலாம். நடு ஓவரில் நாங்கள் சிங்கிள்ஸ் கூட எடுக்க தடுமாறினோம்.
பொறுமையாக ஆடுவதில் தவறு அல்ல. ஆனால் ஓயிடாக அடிக்க வேண்டிய பந்தை கூட கவரில் பில்டரிடம் அடிப்பதெல்லாம் என்ன சொல்வது? நல்ல பந்தில் நாம் ஆட்டம் இழந்து விட்டால் அது வேறு விஷயம். ஆனால் சில பந்துகளை எல்லாம் அடித்து ஆடினால் மட்டுமே ரன்கள் கிடைக்கும். இந்த தவறை எங்கள் அணி வீரர்கள் இன்று செய்து விட்டார்கள் என்று வார்னர் கூறினார். இந்த தோல்வியின் மூலம் டெல்லிய அணி 11 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் இருக்கிறது.