
சோபிக்கவே முடியவில்லை
ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதியில் தொடர் வெற்றிகளை குவித்துவந்த சென்னை சூப்பர் கிங்ஸ், முதல் அணியாக பிளே ஆஃப் முன்னேறியது. தோனியின் மோசமான ஃபார்ம் மட்டுமே, அணியின் பிரச்சனையாக இருந்தது. பிறகு, அணியின் மிடில் ஆர்டரும் ஒவ்வொரு போட்டியிலும் தடுமாறியது. ராயுடு தவிர, மிடில் ஆர்டரில் மற்ற வீரர்களால் சோபிக்கவே முடியவில்லை. குறிப்பாக, மொயீன் அலி, ரெய்னா, தோனி ஆகியோரது பேட்டிங் பற்றி கருத்து கூட சொல்ல முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. குறிப்பாக தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டு பிளசிஸ் சரியாக விளையாடவில்லை எனில் சென்னை அணியால் வெற்றிப் பெற முடியவில்லை.

24 மணி நேரம் கூட இல்லை
இந்த நிலையில் தான் நாளை டெல்லி அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. இதில் அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மிடில் ஆர்டரில் உத்தப்பாவுக்கு பதில் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று தெரிகிறது. அதேபோல், பவுலிங் யூனிட்டில் ஜோஷ் ஹேசில்வுட் நீக்கப்பட்டு அவருக்கு பதில் ஜேசன் சேர்க்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், டெல்லியும் சென்னை அணிக்கு எதிராக பல வியூகங்களை வகுத்து வருகிறது. என்னதான் சொதப்பினாலும் சென்னை டெப்த் பேட்டிங் லைன் கொண்டிருப்பதை டெல்லி கருத்தில் கொண்டுள்ளது. போட்டிக்கு இன்னும் 24 மணி நேரம் கூட முழுமையாக இல்லாத நேரத்தில், டெல்லி வீரர்களிடம் பாண்டிங் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

இரட்டிப்பு வலிமை
இதுகுறித்து அணி மீட்டிங்கில் பேசிய பாண்டிங், "நாம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிளே ஆஃப் முன்னேறி இருக்கிறோம். அதுவும், புள்ளிப்பட்டியலில் நம்பர்.1 அணியாக பிளே ஆஃப் வந்திருக்கிறோம். அதற்கு முதலில் என் வாழ்த்துக்கள். என்னளவில், போன 2020 சீசனை விட, இம்முறை நாம் வலிமையான அணியாக உருவெடுத்துள்ளோம். ஐபிஎல்-ல் எப்பேர்ப்பட்ட அணியாக இருந்தாலும் நம்மால் அவர்களை வீழ்த்த முடியும் அளவுக்கு வளர்ந்துள்ளோம். வாழ்த்துக்கள். ஆனால், நமது பயணம் முடிந்துவிடவில்லை. இன்னும் சொல்லப் போனால், இப்போது தான் நீங்கள் உங்களது இரட்டிப்பு வலிமையை வெளிப்படுத்த வேண்டும்.

சொன்னதை செய்தார்கள்
லீக் சுற்றில் இரண்டு போட்டிகளிலும் நாம் சென்னையை வீழ்த்தி இருக்கிறோம். ஆனால், மீண்டும் இப்போது பிளே ஆஃப்-ல் அவர்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நாம் ஒவ்வொரு அணிக்கும் பல வகையான வியூகங்களை அமைத்து விளையாடி வருகிறோம். ஆனால், சென்னை அணி தோனி எனும் ஒற்றை ஆளுமையை நம்பியுள்ளது. நம் அனைவரது பலம், தோனியின் பலத்துக்கு இணையானது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், கடந்த ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் முன்னேற முடியாமல் வெளியே சென்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ். போகும் போது, 'நாங்கள் அடுத்த ஆண்டு மீண்டு வருவோம்' என்று சொல்லிவிட்டு சென்றார் தோனி. இதோ.. இப்போது பிளே ஆஃப்பில் நம்மோடு மோத தயாராக உள்ளார்கள். இந்த அனைத்துக்கும் காரணம் மகேந்திர சிங் தோனி.

அசந்தா நாம காலி
நீங்கள் அந்த அணியில் யாரை வேண்டுமானாலும் குறைத்து எடைப் போட்டுக் கொள்ளுங்கள். ஆனால், இன்று மட்டுமல்ல.. என்றுமே தோனியை மட்டும் லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவரது கிரிக்கெட் Intelligence பற்றி உங்களுக்கு அவ்வளவாக தெரியாது. அவர் எப்போது என்ன யுக்தி வைத்திருப்பார் என்று யாருக்கும் தெரியாது. அணியின் வெற்றிக்காக அவர் எதுவும் செய்வார். அவரால் முன்பு போல் பந்துகளை க்ளீயர் செய்ய முடியவில்லை என்பது மட்டுமே நம் வசமுள்ள ஒரே பிளஸ் பாயிண்ட். மற்றபடி, அவரது கிரிக்கெட் திறனுக்கு அருகில் கூட எவரும் செல்ல முடியாது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் போட்டிகளில் ஒரு மாதிரி விளையாடுவார்கள். பிளே ஆஃபில் ஒருமாதிரி விளையாடுவார்கள். இங்கு அவர்களது ஆட்டமே வேறு மாதிரி இருக்கும். கொஞ்சம் அசந்தாலும் நாம், இரண்டாவது போட்டியை நோக்கி காத்திருக்க வேண்டியது தான்.


Click it and Unblock the Notifications











