விசாகப்பட்டினம் : : டெல்லி கேபிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான லீக் போட்டி போட்டியில் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றுள்ளது. அத்துடன் அந்த அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து ஆதிக்கம் செலுத்தத் துவங்கி இருக்கிறது.
இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 273 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் சுனில் நரைன் 39 பந்துகளில் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து ரகுவன்ஷி 54, ரஸ்ஸல் 41, ரிங்கு சிங் 26 ரன்கள் குவித்தனர். அனைவரும் 200க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்தது.

அடுத்து ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 166 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதை அடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றி மூலம், தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா அணி, புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் அந்த அணியின் நெட் ரன் ரேட் 2.518 ஆக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் வென்று 6 புள்ளிகளை பெற்று இருக்கிறது. அந்த அணியின் நெட் ரன் ரேட் 1.249 ஆக இருப்பதால் அந்த அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் 2 வெற்றிகள், ஒரு தோல்வியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணியின் நெட் ரன் ரேட் 0.976 ஆக இருக்கிறது. லக்னோ, குஜராத் அணிகளும் மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று இருந்தாலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மூன்று போட்டிகளில் ஆடி தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. டெல்லி அணி நான்கு போட்டிகளில் ஆடி ஒரு வெற்றி மட்டுமே பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது, மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளில் ஆடி மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடமான பத்தாவது இடத்தில் உள்ளது.
சிஎஸ்கே அணி அடுத்து ஆட உள்ள போட்டி அந்த அணிக்கு முக்கியமானதாகும். அடுத்து சன்ரைசர்ஸ் உடன் சிஎஸ்கே அணி ஆட உள்ளது. அந்தப் போட்டியில் வென்றால் புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் இருக்கலாம். மாறாக தோல்வி அடைந்தால் ஏழாவது இடத்துக்கு கூட செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். அது அந்த அணிக்கு கடும் அழுத்தத்தை கொடுக்கும்.