சில தினங்களில் துவக்கம்
ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30ம் தேதிவரையில் தொடர்ந்து 50 நாட்களுக்கு மேல் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ள நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் இந்த சீசனிலும் தொடர்ந்தார்.
அறுவை சிகிச்சை
ஆனால் கடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பீல்டிங் செய்தபோது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து போட்டியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அவருக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த கேப்டன் யார்?
இதையடுத்து அவர் தற்போது நடைபெற்றுவரும் ஒருநாள் தொடர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு பதிலாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. புதிய கேப்டன் ஷ்ரேயாஸ் அளவிற்கு அணியை சிறப்பாக வழிநடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
அணி நிர்வாகம் ஆலோசனை
இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி புதிய கேப்டன் குறித்து இன்றைய தினம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விவாதிக்க உள்ளது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் பங்கேற்று விவாதிக்க உள்ளனர். இதையடுத்து இன்றைய தினமே அணியின் புதிய கேப்டன் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம்.