சோர்வறியா டியான்ட்ரா
உலகம் முழுவதும் கிரிக்கெட் இல்லை, கால்பந்து இல்லை எந்த விளையாட்டும் இல்லை. ஆனால் டியான்ட்ரா சோர்ந்து போய் விடவில்லை. அவர் விடும் மூச்சுக் காற்றில் கூட கிரிக்கெட்தான் ஊறிப் போய்க் கிடக்கிறது. அந்த அளவுக்கு கிரிக்கெட் என்றால் டியான்ட்ராவுக்கு உசுரு. எப்படா மறுபடியும் கிரிக்கெட் ஆடுவோம் என தவித்துக் கொண்டிருக்கிறார் டியான்ட்ரா.. இருப்பு கொள்ளவில்லையாம் இந்த இளம் புயலுக்கு.
கில்லி டியான்ட்ரா
எப்போதுமே பழைய நினைவுகள் சுகமானவை என்று சொல்வார்கள். அந்த வகையில் டியான்ட்ராவைப் பற்றி ஒரு ரீவைன்ட் பார்க்கலாம். படு பரபரப்பான நினைவுகள் அவை. 2008ல் அறிமுகமானார் டியான்ட்ரா. ஆனால் 2010ல்தான் அவர் அதிரடி சாதனை ஒன்றை நிகழ்த்தினார். மகளிர் டி20 போட்டியில் முதல் சதம் அடித்த வீராங்கனை என்ற பெருமையை அந்த ஆண்டில்தான் பெற்றார் டியான்ட்ரா.
புயலாக மாறி ஆட்டம்
அது மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் புயலாக மாறியிருந்தார் டியான்ட்ரா. அவரது ஆட்டம் ஒவ்வொன்றும்.. அப்படி வெறித்தனமாக இருந்தது. வெறும் 45 பந்துகளில் 112 ரன்களைக் குவித்து தென்னாப்பிரிக்காவை கலக்கி விட்டார். அதுதான் மகளிர் டி20 போட்டி ஒன்றில் போடப்பட்ட முதல் சதமாகும். அந்த வகையில் வரலாறு படைத்தார் டியான்ட்ரா.
சதம் போட்டு சாதனை
அந்த சாதனைப் போட்டியில் தான் குவித்த 112 ரன்களில் 9 சிக்ஸர்களைப் பறக்க விட்டிருந்தார் டியான்ட்ரா. 7 பவுண்டரிகள் வேறு. போட்டி முடிவில் அவர் கூறுகையில், ரொம்ப சந்தோஷமா இருக்கு. பெருமையுடன் நாடு திரும்புவேன் என்று கூறியிருந்தார் டியான்ட்ரா. அத்தோடு நிற்கவில்லை அவர். 2009ல் நடந்த உலக டி20 போட்டியில் மிக குறைந்த பந்துகளில் அரை சதம் போட்ட வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார். 22 பந்துகளில் அதை சாதித்தார்.
மிஸ் ஆகும் புயல்
சமீப காலமாக அவரால் சரியாக விளையாட முடியவில்லை. காரணம் அறுவைச் சிகிச்சை, காயம் என்று மாறிப் போனதால். மேலும் கடைசியாக அவர் ஆடிய போட்டிகளிலும் கூட பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. ஆனால் ஒரு காலத்தில் டியான்ட்ரா ஒரு புயலாக காட்சி தந்தவர். அதை எதிரணியினர் மிக நன்றாகவே உணர்ந்திருந்தனர்.
இன்னும் தயார்தான்
2016ல் மேற்கு இந்தியத் தீவுகள் அணி உலகக் கோப்பையை வென்றதில் டியான்ட்ராவின் பங்கும் முக்கியமானது. டியான்ட்ரா ஒரு நல்ல ஆல்ரவுண்டரும் கூட. அவரது பவுலிங் சராசரி 18, பேட்டிங் சராசரி 25க்கு மேல். மகளிர் டி20 போட்டிகளில் இது சிறப்பானதே. இருப்பினும் சமீப காலமாக அவரது திறன் குறைந்து விட்டது உண்மைதான். ஆனாலும் தான் தொடர்ந்து கிரிக்கெட் ஆடும் தகுதியில் இருப்பதாகவே டியான்ட்ரா நம்பிக்கையுடன் கூறுகிறார்.