சென்னை: எனது மகள் ஸிவா இப்போது அடைந்துள்ள முதிர்ச்சியை, சென்னை அணியின் தீபக் சஹர் 50 வயதில் தான் எட்டுவார் என்று சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி கலாய்த்துள்ளார்.
சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் எல்ஜிஎம். இந்தப் படத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண், இவானா, யோகி பாபு, நதியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் எம்எஸ் தோனி பேசுகையில், எனது டெஸ்ட் அறிமுகம் சென்னை மண்ணில் தான் நிகழ்ந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் அடித்திருக்கிறேன். தற்போது தமிழில் தான் என் நிறுவனத்தின் முதல் படமும் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை மண் எப்போது ஸ்பெஷலானது. இந்த மண்ணின் பிள்ளையாக நான் நீண்ட ஆண்டுகளுக்கு முன்பே தத்தெடுக்கப்பட்டுவிட்டேன்.
நான் என் மனைவிக்கு எந்த தமிழ் கெட்டவார்த்தையும் இதுவரை சொல்லிக் கொடுத்ததே இல்லை. எனக்கும் எந்த கெட்ட வார்த்தையும் கிடையாது. ஆனால் மற்ற மொழிகளில் கெட்ட வார்த்தை நன்றாக தெரியும். எல்ஜிஎம் படம் நிகழ்ந்ததற்கு விதிதான் காரணம். எனக்கும் சென்னைக்கும் இடையே வலிமையான பந்தம் உள்ளது. அதேபோல் திருமணமான அனைவருக்கும் வீட்டில் யாரின் ஆட்சி நடக்கும் என்பது புரியும் என்று மனைவியை கிண்டல் செய்தார்.
பின்னர் தீபக் சஹர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தீபக் சஹர் ஒரு ஒயினை போன்றவர். அவர் உடனிருந்தால் ஏன் இவர் இருக்கிறார் என்று தோன்றும். எங்களுடன் இல்லையென்றால், அவரை தான் மனம் தேடும். அவரிடம் இருக்கும் நல்ல விஷயம் என்னவென்றால், அவர் கொஞ்சம் கொஞ்சமாக முதிர்ச்சியாக செயல்பட தொடங்கியுள்ளார்.
ஆனால் முழுமையாக முதிர்ச்சியடைய அவருக்கு நீண்ட நேரம் எடுக்கும். அதுதான் கொஞ்சம் பிரச்சனை. என் வாழ்நாளில் அவர் முதிர்ச்சியாக செயல்பட்டு பார்ப்பேனா என்ற சந்தேகம் உள்ளது. தீபக் சஹருக்கு 50 வயதானாலும் எனது மகள் ஸிவா இப்போது அடைந்துள்ள முதிர்ச்சியை பெறுவாரா என்பதும் சந்தேகமே என்று கலாய்த்து தள்ளியுள்ளார்.