டெல்லி: ஆர்சிபி அணியின் அபாயகரமான பந்துவீச்சாளரான முகமது சிராஜ் பந்துவீச்சில் அதிரடியாக ரன்கள் சேர்ப்பதே தங்களின் திட்டமாக இருந்ததாக டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது. அதிகபட்சமாக பிலிப் சால்ட் 87 ரன்களை விளாசினார்.

வழக்கமாக ஆர்சிபி அணிக்காக சிறப்பாக பந்துவீசும் சிராஜ் நேற்றையப் போட்டியில் மோசமாக செயல்பட்டார். வெறும் 2 ஓவர்கள் மட்டுமே வீசிய அவர் 28 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனால் நிதானம் இழந்த சிராஜ், டெல்லி அணியின் அதிரடி வீரர் பிலிப் சால்ட் உடன் மோதலில் ஈடுபட்டார். பவர் பிளே ஓவர்களில் டெல்லி அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி அழுத்தத்தை உண்டாக்காததே ஆர்சிபி அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இந்த வெற்றி குறித்து டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேசுகையில், ஆர்சிபி அணி சராசரிக்கும் அதிகமான ரன்களை இலக்காக நிர்ணயித்துவிட்டது என்று நினைத்தோம். ஆனால் பந்து அதிகமாகவே வழுக்கியது. அதேபோல் சால்ட் அதிரடி டெல்லி அணியின் வெற்றிக்கு பாதை வகுத்து கொடுத்தது. முகமது சிராஜ் பந்துவீச்சில் ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதே எங்களின் திட்டமாக இருந்தது. ஏனென்றால் சிறப்பாக அவர் பந்துவீசி வருவதோடு, பவர் பிளேவில் தேவையான விக்கெட்டுகளையும் வீழ்த்தி விடுகிறார்.
அதுமட்டுமல்லாமல் முகமது சிராஜின் விக்கெட்டுகள் எதுவும் கேட்ச் மூலமாக வருவதில்லை. அனைத்தும் போல்ட் அல்லது எல்பிடபிள்யூ மூலமாகவே கிடைக்கிறது. அதனால் அவரது லெந்த்தை மாற்ற நினைத்தோம். அதேபோல் எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். சொந்த காரணங்களால் நார்கியே சொந்த ஊர் திரும்பியுள்ளார். அவர் இல்லாததால் இஷாந்த் சர்மா பந்துவீச்சாளர்களை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். எங்களின் அணியின் சிறந்த காம்பினேஷனை சரியான நேரத்தில் கண்டறிந்துள்ளோம். அடுத்த போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்ள வேண்டும். அது சுலபமாக இருக்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.