சென்னை: நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் 5 போட்டிகளில் தோல்வியடைந்த டெல்லி அணி, அடுத்த 5 போட்டிகளில் 4ல் வெற்றிபெற்றுள்ளது சென்னை அணி ரசிகர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 55வது லீக் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாட உள்ளது. இதுவரை சென்னை அணி விளையாடியுள்ள 11 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வியுடன் 13 புள்ளிகள் எடுத்து புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேபோல் டெல்லி 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் எடுத்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

டெல்லி அணி இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும், பிளே ஆஃப் சுற்று வாய்ப்புகள் முழுமையாக முடிவுக்கு வரும். இதனால் வாழ்வா, சாவா போட்டியில் சென்னை அணியை எதிர்த்து சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கவுள்ளது. அதுமட்டுமல்லாமல் சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி அணி கடைசியாக 2010ஆம் ஆண்டு தான் சென்னை அணியை வீழ்த்தியுள்ளது.
இதனால் 13 ஆண்டுகளாக அடைந்து வரும் தோல்விக்கு டெல்லி அணி பதிலடி கொடுக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இரு அணிகளையும் ஒப்பிட்டு பார்த்தால் சென்னை அணியே வலுவாக இருந்தாலும், நடப்பு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் ஆடிய இரு போட்டிகளில் சென்னை அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் டெல்லி அணியால் சென்னை அணிக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் டெல்லி அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் அபாரமாக வென்று ஃபார்முக்கு திரும்பியுள்ளது. அதுவும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணியை வீழ்த்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதேபோல் சென்னை அணி இன்றையப் போட்டியில் வென்றால், பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும். இதனால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.