டெல்லி: நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சொந்த மண்ணில் ஆடிய 6 போட்டிகளில் வெறும் 2ல் மட்டுமே வென்றுள்ளது சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து சென்னை அணி ஆடுகிறது. ஏற்கனவே டெல்லி அணி பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டாலும், மற்ற அணிகளையும் தங்களோடு சேர்த்து வெளியேறி வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் அணியை கடந்தப் போட்டியில் வீழ்த்தி சிஎஸ்கே ரசிகர்களின் நிம்மதியில் மண்ணை அள்ளி வீசியது.

மறுபக்கம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் இருந்தாலும், இதுவரை பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு உறுதி செய்யப்படவில்லை. இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு உறுதியாகும் என்பதால், சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், சென்னை அணி வீரர்களுக்கு சாதகமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில் நடப்பு சீசனில் டெல்லி அணி சொந்த மண்ணில் விளையாடியுள்ள 6 போட்டிகளில் வெறும் 2ல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. மீதமுள்ள 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால், சென்னை அணி ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
இருப்பினும் பிரித்வி ஷாவின் அதிரடியான ஃபார்ம், சால்ட் மற்றும் மிட்செல் மார்ஷ் அதிரடி ஆகியவற்றை சென்னை அணிக்கு எப்படி சமாளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் டாஸ் முக்கிய வகிக்கும் என்றும், கடந்தப் போட்டியில் செய்ததை போல் கேப்டன் தோனி சோதனை முயற்சிகளை கைவிட்டுவார், சிறப்பான வெற்றியை ரசிகர்களுக்கு கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.