பெங்களூரு: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி அடுத்து 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர்கள் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்சல் படேல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதில் ஆர்சிபி அணி சார்பாக டேவிட் வில்லி நீக்கப்பட்டு சுழற்பந்துவீச்சாளர் ஹசரங்கா சேர்க்கப்பட்டார். அதேபோல் இளம் வீரர் வைஷக் விஜய்குமாரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் டெல்லி அணி சார்பாக மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டு ரோவ்மன் பவர் நீக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ஆர்சிபி அணி சார்பாக டூ பிளஸிஸ் - விராட் கோலி கூட்டண்இ தொடக்க வீரர்களான காளமிறங்கியது. இருவரும் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய நிலையில், டூ பிளஸிஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து விராட் கோலியின் கட்டுப்பாட்டுக்குள் ஆட்டம் சென்றது. 33 பந்துகளில் அரைசதம் விளாசிய விராட் கோலி, ஃபுல் டாஸ் பந்தில் சிக்சர் அடிக்க முயற்சி செய்து ஆட்டமிழந்தார்.

இதன்பின்னர் வந்த மேக்ஸ்வெல், ஆர்சிபி அணியின் அதிரடியை தொடர்ந்தார். இதனால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஆனால் இளம் வீரர் லோம்ரோர் 26 ரன்களில் ஆட்டமிழக்க, திடீரென ஹர்சல் படேல் களமிறங்கினார். தினேஷ் கார்த்திக்கை கடைசி நேரத்தில் பயன்படுத்தும் திட்டத்திற்காக ஹர்சல் களமிறக்கப்பட்டார். ஆனால் ஹர்சல் படேல் 6 ரன்களில் அக்சர் படேல் பந்தில் ஆட்டமிழக்க, தொடர்ந்து 14-ஆவது ஓவரின் முதல் பந்தில் மேக்ஸ்வெல் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஆர்சிபி அணியை தினேஷ் கார்த்திக் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குல்தீப் யாதவ் வீசிய முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன் மூலம் டெல்லி அணி டீம் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தியது. அதுமட்டுமல்லாமல் சிறப்பாக ஆடி வந்த ஆர்சிபி 3 பந்துகளில் 3 விக்கெட்டை இழந்ததால், 132 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ரன்கள் சேர்க்க தடுமாறி வருகிறது.