டெல்லி: ஐபிஎல் தொடரில் இன்று டெல்லியில் நடக்கும் 7வது போட்டியில் டெல்லி - குஜராத் அணிகள் மோதுகின்றன. சொந்த மண்ணில் நடக்கும் போட்டி என்பதால், விபத்தில் காயமடைந்து ஓய்வில் இருக்கும் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மைதானத்திற்கு நேரில் வரவுள்ளதால், முதல் வெற்றிக்காக அந்த அணி போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
16வது ஐபிஎல் தொடரில் இன்றையப் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாட உள்ளது. டெல்லி அணி தனது முதல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வியடைந்தது. கேப்டன் வார்னர் தவிர்த்து மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் பேட்டிங்கில் சொதப்பினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் டக் அவுட் ஆனார். தற்போது சொந்த மண்ணில் குஜராத் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

டெல்லி அணியின் பலவீனமே அதன் பந்துவீச்சாளர்கள் தான். இந்திய பந்துவீச்சாளர்கள் வேண்டும் என்று தேடி தேடி வாங்கிய சேத்தன் சக்காரியா, முகேஷ் குமார், கலீல் அகமது ஆகியோரிடம் போதுமான வேகமோ, ஸ்விங்கோ இல்லை. இதனால் கடந்த போட்டியில் லக்னோ அணிக்கு எந்த அச்சுறுத்தலையும் டெல்லி அணியால் கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர்களான அன்ரிச் நார்கியே, இங்கிடி நேற்று டெல்லி அணியுடன் இணைந்தனர்.
இதனால் அவர்கள் உடனடியாக பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் தங்களின் வேட்டையை சொந்த மண்ணில் தொடங்க காத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், இந்தப் போட்டியை நேரில் காண வருவதாக டெல்லி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காயமடைந்த தங்கள் கேப்டனுக்கு உற்சாகம் கொடுக்க, குஜராத் அணியை வீழ்த்த கடுமையாக முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் அணியை பொறுத்தவரை சொந்த மண்ணில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னையை வீழ்த்தி கம்பீரமாக உள்ளது. ஆனால் நடப்பு ஐபிஎல் தொடர் தான் குஜராத் அணிக்கு உண்மையான சோதனை கொடுத்துள்ளது. வெவ்வேறு மைதானங்களில் குஜராத் அணி விளையாட உள்ளதால், அந்த அணியின் முழுமையான திறன் என்னவென்பது இந்த ஐபிஎல் தொடரில் தான் தெரிய வரும். இருப்பினும் பேட்டிங், பவுலிங் என்று சமபலத்துடன் உள்ள குஜராத் அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல.
கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகி இருந்தாலும், நேற்று குஜராத் அணியுடன் டேவிட் மில்லர் இணைந்துள்ளார். இதனால் வில்லியம்சன் இடத்தில் மில்லர் வரப்போவது உறுதி. அதேபோல் சுப்மன் கில், சாஹா, சாய் சுதர்சன், மில்லர், ஹர்திக் பாண்டியா, டிவாட்டியா என்று மரண மாஸ் பேட்டிங் ஆர்டரை குஜராத் அணி வைத்துள்ளது. அதேபோல் வேகத்திற்கு ஷமி, சுழலுக்கு ரஷீத் கான் என்று இரு தரமான பந்துவீச்சாளர்களோடு, அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், ஜோஷ் லிட்டில் ஆகியோர் இணைந்திருப்பது கூடுதல் பலம் தான்.
கடந்த முறை இந்த இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் குஜராத் அணி அசாத்திய வெற்றியை பெற்றது. ஆனால் தற்போது டெல்லி மண்ணில் ஆட்டம் நடப்பதால், இரு அணிகளும் சரி சமமான பலத்துடன் போராடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால் டெல்லி - குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.