டெல்லி: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் படேலுக்கு ஏன் பந்துவீச வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறித்து அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் விளக்கம் அளித்துள்ளார். பேட்டிங்கில் சிறப்பாக ஆடிய அக்சர் படேல், பந்துவீச்சிலும் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பந்துவீச வாய்ப்பு அளிக்காதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
16வது ஐபிஎல் தொடரின் 7வது போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து நடப்பு சாம்பியன் குஜராத் அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது. கடைசி நேரத்தில் டெல்லி அணி துணை கேப்டன் அக்சர் படேல் அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். குஜராத் அணி தரப்பில் முகமது ஷமி மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த குஜராத் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பதிவு செய்தது. அந்த அணியின் சாய் சுதர்சன் 48 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார். அதேபோல் கடைசியாக வந்த டேவிட் மில்லர் 16 பந்தில் 31 ரன்கள் விளாசி ஆட்டத்தை முடித்து காட்டினார். இந்தப் போட்டியில் ஆட்டநாயகனாக சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டார். டெல்லி அணி தரப்பில் அக்சர் படேலுக்கு ஓவர்கள் வழங்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் குழம்பினர்.
இந்த நிலையில் அக்சர் படேல் ஏன் ஓவர்கள் வீச அழைக்கப்படவில்லை என்பது குறித்து டேவிட் வார்னர் விளக்கம் அளித்துள்ளார். அதில், குஜராத் அணி பந்துவீச்சின் போது பிட்ச்சில் ஸ்விங் இருக்கும் என்பது எதிர்பார்த்தது தான். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக பந்து ஸ்விங் ஆனது. ஆனால் பிட்ச்சின் இன்னொரு பக்கத்தில் ஸ்விங் அந்த அளவிற்கு ஆகவில்லை. ஒரு மைதானத்தின் சூழலுக்கு தகுந்தபடி எப்படி விளையாட வேண்டும் என்பதை குஜராத் அணி செய்து காட்டியது. இதே மைதானத்தில் இன்னும் 6 போட்டிகளில் விளையாட இருக்கிறோம்.
அதனால் வரும் போட்டிகளில், வெற்றிபெற முயற்சிப்போம். அதற்கேற்றபடி தயாராவோம். இந்தப் போட்டியில் கடைசி சில ஓவர்கள் வரை நாங்கள் ஆட்டத்தில் தான் இருந்தோம். ஆனால் சாய் சுதர்சன் தொடக்கம் முதலே சிறப்பாக பேட்டிங் செய்தார். மில்லர் வழக்கமாக என்ன செய்வாரோ, அதனை மீண்டும் செய்துவிட்டார். இரண்டாவதாக பந்துவீசும் போது பனி அதிகமாக இருக்கும். அதனால் குறைந்தது டெல்லி மைதானத்தில் 180 முதல் 190 ரன்கள் வரை சேர்க்க வேண்டும். அக்சர் படேல் பந்துவீசாததற்கு பிட்ச் மற்றும் விக்கெட் தான் காரணம். மற்றபடி அவருக்கு காயம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
ஐபிஎல் தொடரில் நீண்ட ஆண்டுகளாக பந்துவீசி வரும் அக்சர் படேல், இந்தியாவின் பிரதான சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவராவார். ஐபிஎல் தொடரில் வெறும் 7.27 எகானமி மட்டுமே வைத்திருந்தும் டேவிட் வார்னர் அக்சர் படேலுக்கு பந்துவீசுவதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அவருக்கு பதிலாக மிட்செல் மார்ஷ் ஓவர்களை வீசினார். மிட்செல் மார்ஷ் மோசமாக பந்துவீசவில்லை என்றாலும், அக்சர் படேலுக்கு ஒரு சில ஓவர்களாவது கொடுத்து டெல்லி அணி முயற்சி செய்து பார்த்திருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.