டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வாழ்வா சாவா ஆட்டத்தில் டெல்லியை எதிர்கொண்ட பஞ்சாப் அணி, அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து டெல்லி அணி, முதல் அணியாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.
ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதில் டெல்லி அணியில் ரிப்பல் படேல் நீக்கப்பட்டு பிரவீன் துபே சேர்க்கப்பட்டார். அதேபோல் பஞ்சாப் அணி சார்பாக ராஜபக்சே நீக்கப்பட்டு சிக்கந்தர் ராசா சேர்க்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணி சார்பாக பிரப்சிம்ரன் சிங் - ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.அதில் ஷிகர் தவான் 7 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த லிவிங்ஸ்டன் 4 ரன்களிலும், ஜித்தேஷ் சர்மா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் மறுபக்கம் மற்றொரு தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங்கின் அதிரடியாக ஆடிய பிரப்சிம்ரன் சிங் 59 பந்துகளில் சதம் கடந்து மிரட்டினார்.
இதன் காரணமாக 18 ஓவர்களில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை சேர்த்தது. பின்னர் முகேஷ் குமார் வீசிய 19வது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் 103 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.
தொடர்ந்து கலீல் அஹ்மத் வீசிய கடைசி ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன் காரணமாக பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை சேர்த்துள்ளது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி அதிரடியாக விளையாடி நேல்ல தொடக்கத்தை கொடுத்தது.
குறிப்பாக கேப்டன் வார்னர் 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். அவருக்கு பக்க பலமாக நின்ற பில் சால்ட் 21 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, இருவரும் அடுத்தடுத்து வெளியேற, இந்த ஜோடி கொடுத்த நல்ல தொடக்கத்தை டெல்லி அணி வீணடித்தது.
மிட்செல் மார்ஷ், ரூசோவ், அக்சர் பட்டேல், மணிஷ் பாண்டே ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, டெல்லி அணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் ஹகீம், பிரவீன் துபே ஆகியோர் தலா 16 ரன்கள் விளாச, டெல்லி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.