கவுகாத்தி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வீரர் தேவ்தத் படிக்கல் 26 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரி மட்டுமே அடித்ததோடு 21 ரன்கள் மட்டுமே எடுத்து அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். இதனால் தேவ்தத் படிக்கலை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமின் கவுகாத்தியில் முதல்முறையாக ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 198 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 192 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றிபெற்றது.

கடைசி 3 ஓவர்களில் 53 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்து ஜுரேல் - ஹெட்மயர் கூட்டணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்த போது, சாம் கரண் வீசிய சிறந்த யார்க்கர் பந்துகளால் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. இம்பேக்ட் பிளேயராக வந்த துருவ் ஜுரேல் 15 பந்துகளில் 32 ரன்கள் விளாசி அசத்தினார். நடப்பு ஐபில் தொடரில் இம்பேக்ட் பிளேயராக வந்து அசத்திய ஒரே வீரர் துருவ் ஜுரேல் தான் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
அதேபோல் இன்னொரு வீரரை ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ராகுல் சஹரை அட்டாக் செய்வதற்காகவே அனுப்பி வைக்கப்பட்ட தேவ்தத் படிக்கல், அவரது ஓட்டுமொத்த இன்னிங்ஸிலும் சேர்த்து ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடித்தார். நீண்ட நேரமாக விளையாடிய படிக்கல், 26 பந்துகளில் வெறும் 21 ரன்கள் மட்டுமே எடுத்து ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதுமட்டுமல்லாமல் இவரது நிதான ஆட்டத்தால் எதிர் முனையில் நின்றிருந்த பேட்ஸ்மேன்கள் மீதும் பிரஷர் எகிறியது.
குறிப்பாக சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சம் மீது பிரஷரை ஏற்றிய படிக்கல், வேறு வழியில்லாமல் சஞ்சு சாம்சன் பெரிய ஷாட்டை விளையாட வேண்டிய நிலையை ஏற்படுத்தினார். தொடர்ந்தும் அதிரடியாக ஆடாமல் ரியான் பராக்கை அட்டாக் செய்ய வைத்ததோடு, டாட் பால்களை ஆடியதும் ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதனால் ராஜஸ்தான் அணியின் மிடில் ஆர்டரில் தேவ்தத் படிக்கல் நீடிப்பது அந்த அணிக்கு இன்னும் சில பிரச்சனைகளை உருவாக்கும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.