“வெற்றிக்குப் பின் கொண்டாடக்கூடாது” - எதிரணியை தாக்கிய தோனியின் முடிவு
Recommended Video

வெற்றிக்குப் பின் கொண்டாடக்கூடாது- தோனியின் முடிவு- வீடியோ
மெல்போர்ன்: தோனி மிகவும் அமைதியான கேப்டன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், 2008ஆம் ஆண்டு “சிபி சீரீஸ்” (CB Series) ஒரு நாள் தொடரில், அமைதியான முறையில் ஆஸ்திரேலிய அணியை தாக்கிய அவரது யுக்திகள் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
“தி தோனி டச்” (The Dhoni Touch) என்ற பெயரில், பரத் சுந்தரேசன் என்ற பத்திரிக்கையாளர் எழுதி உள்ள புத்தகத்தில் தான் இந்த சுவாரஸ்யமான சம்பவம் வெளியாகி உள்ளது.

2008ஆம் ஆண்டு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. தோனி கேப்டனாக ஆடும் பதினைந்தாவது ஒரு நாள் போட்டி அது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணியை 159 ரன்களுக்குள் சுருட்டினர் இந்திய பந்து வீச்சாளர்கள்.
அந்த சிறிய இலக்கை துரத்திய இந்திய அணி, ஒரு கட்டத்தில் 102 ரன்களுக்கு 5 விக்கெட்கள் என்ற நிலையில் இருந்தது. பின், ரோஹித் ஷர்மாவோடு இணைந்த தோனி சிறப்பாக ஆடினார். அப்போது, வெற்றிக்கு பத்து ரன்கள் இருந்த நிலையில், தனக்கு புதிய கையுறைகளை (Gloves) எடுத்து வருமாறு கூறினார். உண்மையில், அந்த நேரத்தில் தன் அணி வீரர்களுக்கு தன் உத்தரவை தெரிவிப்பதற்காகவே, இப்படி செய்தார்.
அவர் அணி வீரர்களுக்கு அப்போது சொன்னது இதுதான். “வெற்றிக்கு பின் யாரும் கொண்டாட வேண்டாம்”. இந்த செய்தியை மற்ற வீரர்களுக்கு அனுப்பிய அவர், பின் ரோஹித் ஷர்மாவிடம், வெற்றிக்கு பின் இளம் வீரர்கள் எப்படி கைகுலுக்க வேண்டும் என்ற யோசனைகளை தெரிவித்தார். அதன்படி, இளம் வீரர்கள் எந்த வெற்றி களிப்பையும் முகத்தில் காட்டாமல், அமைதியான பார்வையோடு ஆஸ்திரேலிய வீரர்களை அணுகுமாறு கூறினார்.
இதை தோனி ஏன் செய்தார் என்பது சுவாரஸ்யமான ஒன்று. இந்த போட்டி நடந்த காலத்தில் சாம்பியன் அணியான ரிக்கி பாண்டிங்கின் ஆஸ்திரேலிய அணி, எந்த தோல்வியையும் எதிரணியின் அதிர்ஷ்டம் என்றும், தாங்கள் அனைத்து போட்டிகளையும் வெல்பவர்கள், ஒரு வேளை எதிரணி வென்றால் அது நாம் செய்த தவறுகளால் தான், என்பது போலவும் கருதினர். இதனால், தோல்விகளால், மனதளவில் அவர்கள் எளிதில் சோர்வடைவதில்லை.
இதை உடைக்கும் வகையில், இந்த போட்டியின் வெற்றிக்கு பின் இந்திய வீரர்கள் அமைதியாக இருந்தது, “இந்த வெற்றி எங்களுக்கு பெரிய காரியமில்லை” என்பது போன்ற ஒரு தோரணையை ஏற்படுத்தியது. தோனியின் இந்த யுக்திகள் சரியாக வேலை செய்ய, அந்த மூன்று நாடுகள் பங்கேற்ற ஒரு நாள் தொடரை வென்று இந்திய அணி சாதித்தது.
Story first published: Tuesday, July 24, 2018, 10:52 [IST]
Other articles published on Jul 24, 2018


Click it and Unblock the Notifications