மும்பை: முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான தீபக் சாஹரை, தோனி வலைப்பயிற்சியின் போது பேட்டை எடுத்து அடிக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் 2025 ஐபிஎல் தொடரில் மோத உள்ளன.
இந்த இரு அணிகளும் ஏற்கனவே ஒருமுறை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியிருந்தன. அதில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், மீண்டும் இந்த இரு அணிகளும் மும்பை வான்கடே மைதானத்தில் மோத உள்ளன.

இந்த போட்டிக்கான வலைப் பயிற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஈடுபட்டிருந்தது. அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள முன்னாள் சிஎஸ்கே வீரரான தீபக் சாஹர் தோனியைப் பார்க்க வந்தார். அப்போது அவர் தோனியைச் சீண்டும் வகையில் வேடிக்கையாக சேட்டை செய்தார்.
உடனடியாக தோனி தனது பேட்டை எடுத்துக்கொண்டு அவரை அடிக்கப் பாய்ந்தார். ஆனால், அது விளையாட்டாகச் செய்ததுதான். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது. பலரும் தீபக் சாஹர் இன்னமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரராகவே இருக்கிறார் எனத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
தீபக் சாஹர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2018 முதல் 2024 வரை விளையாடினார். 2025 ஐபிஎல் ஏலத்தில் அவரை வாங்குவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முயன்றது. ஆனால், கையில் போதிய தொகை இல்லாததால் அவரை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணி அவரை 9.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
தற்போது அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் பவர் பிளே ஓவர்களில் பந்து வீசும் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார். பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்த பிறகும், தீபக் சாஹருக்கான முக்கியத்துவம் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தீபக் சாஹர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டாலும், தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளராகவே பார்க்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது தீபக் சாஹர் அதிரடியாக பேட்டிங் செய்திருந்தார். அந்தப் போட்டியில் தோனி பேட்டிங் செய்ய வந்த போது அவரைச் சீண்டும் வகையில் நடந்து கொண்டார் தீபக் சாஹர். அந்தப் போட்டி முடிந்தவுடன் தோனி, தீபக் சாஹருக்காகக் காத்திருந்து அவரைப் பேட்டால் வேடிக்கையாக அடித்தார். அது போன்ற சம்பவம் தான் இப்போது மீண்டும் நடந்துள்ளது.