ஏம்ப்பா தம்பி டோணி ... பைக்கை எடுத்தா சொல்லிட்டுப் போயேம்ப்பா...!
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.டோணியின் குடும்பத்தினருக்கு ராஞ்சி போலீஸார் ஒரு கெஞ்சலான கோரிக்கையை வைத்துள்ளனர்... அது என்னவென்றால் 'ஐயா' அதிகாலையில் பைக் ஓட்டுவதாக இருந்தால் தயவு செய்து எங்களிடம் முன்கூட்டியே சொல்லுங்கள், பாதுகாப்பு கொடுக்க சவுகரியமாக இருக்கும் என்பதே அந்தக் கோரிக்கை.
பைக் பிரியர் .. அல்ல அல்ல.. பைக் வெறியரான டோணி அடிக்கடி பைக்கும், காலில் கியருமாக பிய்த்துக் கொண்டு பறப்பதால் அவருக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியாமல் திணறுகிறார்களாம் ராஞ்சி போலீஸார்.
இதனால்தான் அவரை விட்டு விட்டு அவரது குடும்பத்தினரிடம் கோரிக்கை வைத்துள்ளனராம்.

அதிகாலை வேளையில்...
ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் டோணி இருந்தால் போலீஸாருக்கு டென்ஷனாகி விடுகிறதாம். காரணம், அதிகாலையிலேயே தனது பைக்கை எடுத்துக் கொண்டு வெளியில் ஓடி விடுகிறாராம் டோணி.

கார்த்தாலேயேவா...
அதிகாலையில் இப்படி டோணி பைக்கில் கிளம்பிப் போவதால் அவருக்குப் பாதுகாப்பு அபாயம் ஏற்படுவதாக போலீஸார் அஞ்சுகின்றனர். அதிகாலையில் தனியாக அவர் செல்வதால் விஷமிகளால் அவருக்கு ஆபத்து ஏற்படலாம், குறிப்பாக மாவோயிஸ்டுகளால் ஆபத்து நேரிடலாம் என போலீஸார் கவலைப்படுகின்றனர்.

வேடிக்கை பார்க்கத்தான்..
ஆனால் டோணி ஜாலி ரைடாக போவதில்லையாம். மாறாக உள்ளூர் ஸ்டேடியத்தில், நடைபெறும் கால்பந்து வீரர்களின் பயிற்சி, வில்வித்தை வீரர்களின் பயிற்சியை வேடிக்கை பார்க்கத்தான் போகிறாராம் டோணி.

இருந்தாலும் சொல்லிட்டுப் போலாமே...
ஆனால் போலீஸார் இதை ஏற்பதாக இல்லை. அவர்கள் டோணி குடும்பத்தினரை அணுகி ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். டோணி ஜாலியாக ரைடு போகட்டும். தடுக்கவே மாட்டோம். ஆனால் தயவு செய்து அவர் எப்போது போகிறார் என்பதை சொல்லி விடுங்கள். அதுதான் எங்களுக்கு வசதி. அவருக்குப் பாதுகாப்பு தர முடியும் என்று கூறியுள்ளனராம்.


Click it and Unblock the Notifications