சீனிவாசனுடன் ஆலோசித்த டோணி.. சிஎஸ்கே தடை நீங்கும்வரை வேறு அணிக்காக ஆட முடிவு!
சென்னை: ஐபிஎல் தொடரில் ஆட அடுத்த இரு ஆண்டுகளுக்கு, சிஎஸ்கே அணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், டோணி புதிய அணிக்காக ஆட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனிவாசனுடன் நடந்த சந்திப்புக்கு பிறகு டோணி மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் காத்திருக்கலாம் என்று முடிவு செய்திருந்த டோணி அந்த முடிவை மாற்றிக்கொண்டு வேறு அணிக்காக ஆட முடிவு செய்துள்ளார்.

2ம் தாய்வீடு
2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டித் தொடர்கள் நடந்து முடிந்துள்ளன. அனைத்து தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் டோணி. ஜார்கண்டை சேர்ந்த டோணி, சென்னை வீரர் என்றே பரவலாக அறியப்படும் அளவுக்கு சிஎஸ்கே அணியும் அவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.

தடை
டோணி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 முறை ஐ.பி.எல். கோப்பையையும், 2 முறை சாம்பியன்ஸ் ‘லீக்' கோப்பையையும் கைப்பற்றியது. இந்நிலையில், நிர்வாகிகள் நடத்திய, சூதாட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதால் 2016, 2017ம் ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர்களில் அவ்வணிகளால் ஆட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

புதிய அணிகள்
எனவே, இந்த 2 அணிகளுக்கும் பதிலாக இரண்டு ஆண்டுக்கு புதிய அணிகள் ஏலத்தில் எடுக்கப்பட உள்ளது. சென்னை அணிக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டதால் டோணி, புதிய ஐ.பி.எல். அணியில் விளையாட முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனிவாசனுடன் சந்திப்பு
சிஎஸ்கே தலைவராக இருந்த ஐசிசி சேர்மன் சீனிவாசனை 2 நாட்கள் முன்பு டோணி நேரில் சந்தித்து பேசினார். அப்போது தனது விருப்பத்தை தெரிவித்து, சீனிவாசனிடம் ஒப்புதல் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மீண்டும் சிஎஸ்கே
2 ஆண்டுக்கு மட்டுமே டோணி புதிய அணியில் விளையாடுவார். அதன் பிறகு அவர் மீண்டும் சென்னை அணிக்கே திரும்பி விடுவார் என்று கூறப்படுகிறது. சென்னை, ராஜஸ்தான் அணிகளில் இருந்து முன்னணி வீரர்கள் 6 பேர் புதிய ஐ.பி.எல். அணிகளில் நேரடியாக ஒப்பந்தம் ஆவார்கள். மீதியுள்ள வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று பிசிசிஐ வட்டாரம் கூறுகிறது.


Click it and Unblock the Notifications