கொழும்பு : ரோஹித் சர்மாவின் வளர்ச்சி அத்தனை எளிதானதல்ல. சுமார் ஆறு வருடங்கள் இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்காமல் தட்டுத் தடுமாறிக் கொண்டு இருந்தார்.
விராட் கோலிக்கு முன்பே அணியில் வாய்ப்பை பெற்ற ரோஹித், நீண்ட கலாம் கோலி ரன் குவித்து, சாதனை மேல் சாதனை செய்து கொண்டிருந்ததை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தார்.

ஆனால், தன்னை பேட்ஸ்மேனாக நிரூபித்தது மட்டுமின்றி, விராட் கோலிக்கு பின் அணியை வழிநடத்தும் கேப்டனாகவும் தன் நிலையை உயர்த்திக் கொண்டு இருக்கிறார்.
ரோஹித் சர்மாவை அணியில் சேர்த்தது முதல் மிடில் ஆர்டரில் அவர் சுமாராக ஆடினாலும் அணியில் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தவர் அப்போதைய கேப்டன் தோனி. சில போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், அவரை மீண்டும் அணியில் சேர்த்துக் கொண்டார்.
ரோஹித் சர்மா தற்போது 10,000 ரன்களை ஒருநாள் போட்டிகளில் கடந்துள்ளார். அதை அவர் 248 இன்னிங்க்ஸ்களில் கடந்துள்ளார். ஆனால், தன் முதல் 2,000 ரன்களை அவர் கடக்க சுமார் 82 இன்னிங்க்ஸ்கள் அவருக்கு தேவைப்பட்டது. அப்படியானால் தோனி அவரை எந்த அளவுக்கு நம்பி ஆதரவு அளித்து இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.
பின் 2013இல் தோனி தலைமையிலான அணியில் துவக்க வீரர் சரியாக அமையாத போது ரோஹித் சர்மாவுக்கும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். தோனி 2007 முதல் 2012 வரை அவருக்கு அணியில் வாய்ப்பு கொடுத்து வந்ததால் தான் அவர் பின் தனக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.
ரோஹித் சர்மா 10,000 ஒருநாள் போட்டி ரன்களை கடந்ததை பற்றி பேசுகையில் கவுதம் கம்பீர் அவரது துவக்க காலத்தையும், தோனி அவருக்கு உதவியதையும் குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.
"10,000 ரன்களை குவிப்பது என்பது அவருக்கு சாதாரணமல்ல. நிறைய ஏற்ற, இறக்கங்களை அவர் பார்த்து விட்டார். அதை அவர் அனுபவித்து இருப்பதால் இளம் வீரர்களுக்கு அவர் கேப்டனாக ஆதரவு அளிப்பார் என நம்புகிறேன். இன்று ரோஹித், ரோஹித்தாக இருப்பதற்கு எம்எஸ் தோனி தான் காரணம். அவர் துவக்கத்தில் தடுமாறிக் கொண்டு இருந்த போது தோனிதான் அவரை தொடர்ந்து ஆதரித்தார். ரோஹித் தனக்கு பின் ஒரு அடையாளத்தை ரன் குவித்தவராக மட்டுமல்லாமல், கேப்டனாகவும் விட்டுச் செல்ல வேண்டும் என்றால் அவர் இளம் வீரர்களை எப்படி ஆதரிக்கிறார் என்பதை பொறுத்தே அது அமையும்." என கம்பீர் கூறினார்.