
பிறகு சறுக்கல்
ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதியில், வெற்றிகளை குவித்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ், முதல் அணியாக பிளே ஆஃப் முன்னேறியது. தோனியின் மோசமான ஃபார்ம் மட்டுமே, அணியின் பிரச்சனையாக இருந்தது. பிறகு, அணியின் மிடில் ஆர்டரும் ஒவ்வொரு போட்டியிலும் தடுமாறியது. ராயுடு தவிர, மிடில் ஆர்டரில் மற்ற வீரர்களால் சோபிக்கவே முடியவில்லை. குறிப்பாக, மொயீன் அலி, ரெய்னா, தோனி ஆகியோரது பேட்டிங் பற்றி கருத்து கூட சொல்ல முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டு பிளசிஸ் சரியாக விளையாடவில்லை எனில் சென்னை அணியால் வெற்றிப் பெற முடியவில்லை. இறுதிக் கட்டத்தில் ஜடேஜா முடிந்த அளவு அடிக்கிறார். அவ்வளவு தான். இவர்கள் மூவரும் ஃபெயில் ஆனால், சென்னை அணியால் 70 ரன்கள் கூட அடிக்க முடியாது என்பதே நிதர்சனம்.

அவருக்கு பதில் இவர்
இந்த இக்கட்டான நிலையில் தான், நாளை டெல்லி கேபிட்டல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. இதில் சென்னை அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மிடில் ஆர்டரில் உத்தப்பாவுக்கு பதில் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று தெரிகிறது. அதேபோல், பவுலிங் யூனிட்டில் ஜோஷ் ஹேசில்வுட் நீக்கப்பட்டு அவருக்கு பதில் ஜேசன் சேர்க்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், டெல்லியும் சென்னை அணிக்கு எதிராக பல வியூகங்களை வகுத்து வருகிறது. அதில் குறிப்பானது, ஓப்பனர்களை விரைவாக அவுட் செய்வது.

அவர்கள் தான் டார்கெட்
ஆம்! ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளசிஸ் ஆகியோரை, பவர் பிளேக்குள் வீழ்த்தி விட வேண்டும் என்பதே டெல்லியின் பிரதான வியூகமாகும். இருவரையும் 6 ஓவர்களுக்குள் அவுட் செய்துவிட்டாலே, சென்னை அணியை 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்திவிட முடியும் என்பதை டெல்லி நன்கு உணர்ந்து வைத்துள்ளது. இறுதிக் கட்டத்தில் பவுலர்களை விளாசும் அளவுக்கு ஹிட்டர்கள் இல்லை என்பதும் டெல்லி பிளஸ் பாயிண்ட் தான். ஜடேஜா அடித்தால் தான் உண்டு. அவர் அடிக்கவில்லை எனில், கடைசிக்கட்ட ஓவர்களில் ரன்கள் நிச்சயம் வராது.

உங்களிடம் எதிர்பார்ப்பது
இந்நிலையில், ஒன் டவுன் களமிறங்கி சொதப்பி வரும் மொயீன் அலியிடம் தோனி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். குறிப்பாக, தற்போது அணியின் மொயீன் அலியின் நிலை குறித்து தோனி பேசியிருப்பதாக தெரிகிறது. மொயீன் அலியிடம் இருந்து அணி என்ன எதிர்பார்க்கிறது என்பதையும் தோனி எடுத்துரைக்கிறார். அதில், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உங்களிடம் எதிர்பார்ப்பது 30 - 35 குயிக் ரன்களும், 1 விக்கெட்டும் தான். நாங்கள் அதிகம் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இந்த இலக்கை நீங்கள் ஒவ்வொரு போட்டியிலும் எட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று கூறியுள்ளதாக தெரிகிறது.

களமிறக்க வியூகம்
கடந்த சில போட்டிகள் அனைத்திலும் மொயீன் அலியின் செயல்பாடு பூஜ்யம் என்ற அளவில் தான் இருக்கிறது. அவரால் 5 ரன்கள் கூட அடிக்க முடியவில்லை. விக்கெட்டும் எடுக்க திணறுகிறார். தற்போது மீண்டும் சிஎஸ்கே நிர்வாகம் சார்பில், ஒரு கேப்டனாக பொறுப்புடன் மொயீன் அலியிடம் எடுத்துரைத்திருக்கிறார். ஒருவகையில் இது மறைமுகமான வார்னிங் என்றும் எடுத்துக் கொள்ளலாம். காரணம், அடுத்த 2022 ஐபிஎல் தொடரை முன்னிட்டு, வரும் டிசம்பர் மாதம் பெரும் ஏலம் நடைபெற உள்ளது. இதில், அனைத்து அணிகளும், புதிய வீரர்களை களமிறக்க வியூகம் அமைத்து வருகின்றன. மேற்கொண்டு 2 புதிய அணிகளும் ஐபில்-ல் இணைகின்றன.

பாசத்துடன் எச்சரிக்கை
இந்த சூழலில், சென்னை அணியிலும் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. பல புதிய வீரர்கள் அணியில் இடம் பெறுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தோனி, மீண்டும் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றே தெரிகிறது. அடுத்த சீஸனோடு அவர் ஓய்வு பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வெளிநாட்டு வீரர்கள் பலர் புதிதாக வாங்கப்படலாம் என்று தெரிகிறது. ஆகையால், இந்த சீசனில் சரியாக விளையாடாத வீரர்களை கழட்டிவிட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த பட்டியலில் மொயீன் அலியும் இருப்பதால் தான், தோனி மூலம் அவருக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது சிஎஸ்கே நிர்வாகம்.

மாறும் தலையெழுத்து
இந்த எச்சரிக்கை மணி என்பது சென்னை அணியில் சரியாக விளையாடாத பல வீரர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சிஎஸ்கே ரசிகர்களால் 'சின்னத் தல' என்று கொண்டாடப்படும் ரெய்னாவுக்கும் இது மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 2020 சீசனில், சென்னை அணியில் விளையாடாத ரெய்னா, இம்முறை விளையாடியும் எந்த பயனும் இல்லாமல் இருக்கிறது. தோனி போலவே ரெய்னாவும் ஃபார்ம் இலலாமல் தான் தடுமாறுகிறார். இருவருமே கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஐபிஎல்-ல் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதனால், சரியான டச் இல்லாமல் திணறி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக, பார்த்தோமெனில் எதிர்வரும் மெகா ஏலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல வீரர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications











