மும்பை: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான குல்பதின் நயீப், சமீபத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்களைக் கொண்ட தனது ஆல்-டைம் லெவன் அணியை அறிவித்து, கிரிக்கெட் ரசிகர்கள் இடையே விவாதத்தை உருவாக்கியுள்ளார்.
2025 ஆசியக் கோப்பை தொடருக்கு முன்னதாக அவர் வெளியிட்ட இந்த டி20 அணியில், இந்திய கிரிக்கெட்டின் இரண்டு ஜாம்பவான்களான எம்.எஸ். தோனி மற்றும் ரோஹித் சர்மாவிற்கு இடம் அளிக்காதது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் அறிவித்துள்ள அணியில் யார், யாருக்கு இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது?

குல்பதின் நயீப் தனது அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இடது-வலது கை பேட்டிங் காம்பினேஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதன்படி, ஆப்கானிஸ்தானின் அதிரடி விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இந்தியாவின் இளம் புயல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளார். "நான் இடது-வலது தொடக்கக் கூட்டணியுடன் செல்ல விரும்புகிறேன்," என்று அவர் தனது தேர்வுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
நடுவரிசையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!
மூன்றாவது இடத்தில் கிங் கோலியும், நான்காவது இடத்தில் இந்தியாவின் இளம் வீரரான திலக் வர்மாவும் உள்ளனர். ஆல்-ரவுண்டர்களாக ஆப்கானிஸ்தானின் முகமது நபி மற்றும் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மற்றொரு ஆல்-ரவுண்டர் இடத்திற்கு அஸ்மத்துல்லா ஒமர்சாய் அல்லது ரவீந்திர ஜடேஜா ஆகியோரில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பேன் என்றும் நயீப் கூறியுள்ளார்.
தனது அணியின் கேப்டனாக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானை நயீப் நியமித்துள்ளார். இது ஆப்கானிஸ்தான் வீரர்களின் திறமை மற்றும் தலைமைப் பண்பின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை காட்டினாலும் இந்திய வீரர்களை குறைத்து மதிப்பிட்டு இருப்பதாக சிலர் விமர்சித்து உள்ளனர்.
பந்துவீச்சில், இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ராவுடன், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஜீப் உர் ரஹ்மான் மற்றும் நவீன்-உல்-ஹக் ஆகியோருக்கு இடம் அளித்துள்ளார்.
ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் எம்.எஸ். தோனி போன்ற அனுபவமிக்க ஜாம்பவான்களைத் தவிர்த்தது குறித்து பெரும் விவாதம் எழுந்துள்ளது. ரோஹித் சர்மாவிற்கு பதிலாக இளம் வீரர் ஜெய்ஸ்வாலைத் தேர்ந்தெடுத்தது, நயீப்பின் நவீன மற்றும் அச்சமற்ற கிரிக்கெட் அணுகுமுறையைக் காட்டுகிறது.
அதேபோல், ஜாம்பவான் விக்கெட் கீப்பர் தோனிக்கு பதிலாக, தற்போதைய ஃபார்ம் மற்றும் அதிரடி ஆட்டத்திற்காக குர்பாஸை விக்கெட் கீப்பராகத் தேர்ந்தெடுத்துள்ளார். இந்தத் தேர்வு, குல்பதின் நயீப் தனது நாட்டு வீரர்கள் மீது வைத்துள்ள பெருமையை பிரதிபலிக்கிறது. ஆனால், இந்திய ரசிகர்கள் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்களின் மீது பற்றுடன் இருப்பதால் நயீப் தேர்வு செய்த அணியை விமர்சித்து வருகின்றனர்.