தோனி ஆட்டமிழந்ததை கொண்டாடிய CSK வீரர்? செல்லமாக கண்டித்த அணி நிர்வாகம்.. ஆமாங்க. அப்படி தான் பண்ணாரு
சென்னை : விளையாட்டுத்துறையில் தங்களுடைய வெற்றியை கொண்டாட ஒவ்வொரு வீரர்களும் ஒவ்வொரு ஸ்டைலை பயன்படுத்துவார்கள். ரொனால்டோ "siu" என்ற ஒரு ஸ்டைலை பின்பற்றுவார்.

கிரிக்கெட்டில் எடுத்துக் கொண்டால் கிறிஸ் கெயில், கங்கம் ஸ்டைல் நடனத்தை ஆடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். ஷிகர் தவான் கேட்ச் பிடித்தால் தனது காலை தூக்கி தொடையில் தட்டுவார். வங்கதேச வீரர்கள் நாகினி டான்ஸ் ஆடி எதிரணியை வெறுப்பேற்றுவார்கள்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பங்கேற்று பிரபலமாக வளர்ந்து வருபவர் சி எஸ் கே வீரர் மதிஷா பதிராணா, இலங்கை அணியின் குட்டி மலிங்கா என ரசிகர்கள் இவரை அழைக்கிறார்கள். காரணம் மலிங்காவை போல் பந்து வீசும் ஸ்டைலை இவர் கொண்டிருக்கிறார்.
இதேபோன்று பதிராணா ஒவ்வொரு முறையும் விக்கெட் எடுக்கும் போது கையை நெஞ்சில் வைத்துக் கொண்டு தியானம் செய்வது போன்று ஒரு ஸ்டைலை பின்பற்றுகிறார். இது குறித்து கேட்டதற்கு தான் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகர் என்றும் இதனால் இந்த ஸ்டைலை தாம் செய்வதாகவும் பதிராணா கூறியிருந்தார்.

இந்த நிலையில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தின் போது தோனி 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். அப்போது தோனி ட்ரெஸ்ஸிங் ரூம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த பதிரானா நெஞ்சில் கையை வைத்து தன்னுடைய கொண்டாட்ட ஸ்டைலை செய்வது போன்று புகைப்படம் பதிவானது.
இது குறித்து பலரும் சொந்த அணி கேப்டன் ஆட்டமிழந்ததற்கு இவர் ஏன் கொண்டாடுகிறார் என கேள்வி கேட்டனர். இது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகம் தனது சமூக வலைத்தள பக்கத்திலேயே இது உங்கள் கொண்டாட்டத்திற்கு சரியான நேரமில்லை பதிரானா என கிண்டல் அடித்திருக்கிறார்கள். இதற்கு தற்போது பதில் அளித்துள்ள பதிராணா தான் பந்து வீசுவதற்கு தயாராகும் வகையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.