மும்பை: ஷிகர் தவான் அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்று இருக்கும் நிலையில் அவரது கிரிக்கெட் வாழ்வை கேப்டன் ரோஹித் சர்மா தான் வீணடித்தார், அவருக்கு வாய்ப்பு தராமல் அணியில் இருந்து நீக்கினார் என சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் ஒரு பக்கம் முன்வைக்கப்பட்டு வருகின்றன. விராட் கோலி ரசிகர்கள் தான் இந்த குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறர்கள். இதில் எந்த அளவு உண்மை என்பதை பார்க்கலாம்.
ஷிகர் தவான் முதன் முதலாக 2010 ஆம் ஆண்டு இந்திய ஒரு நாள் அணியில் அறிமுகமானார் 2011 ஜூன் வரை அவருக்கு ஐந்து போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் ஒரு அரை சதம் மட்டுமே அடித்ததை அடுத்து அவருக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2011ஆம் ஆண்டில் ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் மட்டும் விளையாடினார்.

2013ல் ஒரு நாள் அணியில் மீண்டும் வாய்ப்பு பெற்றார். மேலும், டெஸ்ட் அணியிலும் அறிமுகம் ஆனார். டெஸ்ட் அறிமுகத்தில் முதல் போட்டியில் 187 ரன்கள் எடுத்தார். ஒரு நாள் போட்டியில் தனக்கு கிடைத்த மறு வாய்ப்பில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சதம் அடித்து இந்திய அணியின் நிரந்தர வீரராக மாறினார் தவான்.
டி20 அணி, ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணியில் இந்திய அணியின் துவக்க வீரராக தொடர்ந்து இடம் பெற்று வந்தார். இதனிடையே 2018 ஆம் ஆண்டுக்கு பின் அவருக்கு டி20 அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் நிதானமாக ஆடுவதாக அதற்கு காரணம் சொல்லப்பட்டது. அப்போது விராட் கோலி தான் இந்திய அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஷிகர் தவானை டி20 அணியில் இருந்து நீக்கியதற்கு விராட் கோலி முக்கிய காரணம் ஆவார். அடுத்து 2021 ஆம் ஆண்டுக்குப் பின் அவருக்கு டெஸ்ட் அணியிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதற்கு ரோஹித் சர்மாவும், கேப்டனாக இருந்த விராட் கோலியும் தான் காரணம். அதற்கு முன்பு வரை ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்தார். அதன் பின்பு ரோஹித் சர்மா துவக்க வீரராக மாறினார்.
அதனால், ஷிகர் தவானின் இடம் பறிக்கப்பட்டது. டெஸ்ட் அணி மற்றும் டி20 அணியில் தனது வாய்ப்பை இழந்த ஷிகர் தவான் ஒரு நாள் அணியில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார். 2022ல் ஒரு நாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா வந்த பின்னரும் தவானுக்கு அளிக்கப்பட்டு வந்தது. டிசம்பர் 2022க்கு பின் தவானுக்கு ஒரு நாள் அணியிலும் இடம் மறுக்கப்பட்டது.
அவருக்கு பதிலாக சுப்மன் கில் டி20 அணியிலும், ஒருநாள் அணியிலும் துவக்க வீரராக முன்னிறுத்தப்பட்டார். அந்த வகையில் ஷிகர் தவானின் ஒரு நாள் அணி வாய்ப்பு ரோஹித் சர்மாவால் பறிக்கப்பட்டது. அதே சமயம், ஷிகர் தவானின் கிரிக்கெட் வாழ்வை ரோஹித் சர்மாவோ அல்லது விராட் கோலியோ தான் முடிவுக்கு கொண்டு வந்தனர் என ஒட்டுமொத்தமாக சொல்லிவிட முடியாது. ஷிகர் தவானின் ஃபார்ம் மற்றும் உடற் தகுதியும் கடைசி சில ஆண்டுகளில் மோசமாக இருந்தது.
அவரது தனிப்பட்ட வாழ்வில் அவருக்கு ஏற்பட்ட துயரங்கள் அதற்கு காரணமாக இருக்கலாம். மேலும், தவானின் நிலையை உணர்ந்த பிசிசிஐ, தேர்வுக் குழு மற்றும் அணி நிர்வாகம் மாற்று வீரர்களை கண்டறியத் துவங்கினர். தனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததை தவான் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டதையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். இதுவரை ஒரு முறை கூட அவர் யாரையும் குறை சொல்லவில்லை. தனக்கான காலம் முடிந்துவிட்டது என்று பல பேட்டிகளில் குறிப்பிட்டு இருக்கிறார்.