மும்பை : ஐபிஎல் 2023ஆம் ஆண்டு தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்த போது 15 ஓவர் முடிவில் 118 ரன்கள் தான் அடித்திருந்தது.
அப்போது 16வது ஓவரை வீசிய அர்ஜூன் டெண்டுல்கர், 2 சிக்சர்,4 பவுண்டரி, ஒரு Wide மற்றும் 1 நோ பால் வீசி மும்பை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் அந்த ஓவரில் மட்டும் மும்பை அணி 31 ரன்களை விட்டு கொடுத்தது.

பஞ்சாப் அணி கடைசி 5 ஓவரில் 96 ரன்கள் அடிக்க, அந்த அணி 118 ரன்களில் இருந்து 214 ரன்கள் வரை அடித்தது. இது மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. பவர்பிளேவில் சிறப்பாக பந்துவீசிய அர்ஜூன் டெண்டுல்கரை, போதிய அனுபவம் இல்லாத நிலையில் கடைசி கட்டத்தில் பயன்படுத்தியது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அர்ஜூன் டெண்டுல்கர் யாக்கரை சிறப்பாக வீசுவதால், அவரை ரோகித் கடைசி நேரத்தில் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், அர்ஜூன் டெண்டுல்கருக்கு போதிய வேகம் இல்லை என்பதால், அது ஒரு குறையாகவே தெரிகிறது. இதனை தெரிந்தும், ரோகித் வேண்டுமென்றே அர்ஜூன் டெண்டுல்கரை கிணற்றில் தள்ளிவிட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இது தான் சாக்கு என்று பலரும் அர்ஜூன் டெண்டுல்கரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அர்ஜூன் டெண்டுல்கருக்கு இன்னும் போதிய அனுபவம் கிடைக்கவில்லை. இந்த பாடத்திலிருந்து அவர் கற்று கொள்ளலாம், இல்லை இந்த சம்பவம் அவருடைய உத்வேகத்தை குலைத்துவிடலாம். இதனால் புலிக்கு பிறந்தது பூனையா இல்லை புலி குட்டியா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.