வெளியேற்றுதல் சுற்று
இந்நிலையில், நேற்று (ஆக.11) வெளியேற்றுதல் சுற்று போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. திண்டுக்கல் அணியில், ஹரி நிஷாந்த் (கேப்டன்), மணி பாரதி, லோகேஷ்வர் (c), சுவாமிநாதன், சுதீஷ், சிலம்பரசன், விவேக், குர்ஜப்னீத் சிங், மோகித் ஹரிகரன், விக்னேஷ், ஸ்ரீனிவாசன் ஆகிய வீரர்கள் இடம்பெற்றனர். கோவை கிங்ஸ் அணியில், அஜித் ராம், ஷாருக் கான் (கேப்டன்), ஆர். திவாகர், அபிஷேக் தன்வர், சுரேஷ் குமார் (c), கங்கா ஸ்ரீதர் ராஜூ, முகிலேஷ், செல்வகுமரன், சாய் சுதர்சன், யுதீஸ்வரன், அஷ்வின் வெங்கட்ராமன் ஆகியோர் இடம்பெற்றனர்.
சாய் சுதர்சன் ஆறுதல்
திண்டுக்கல் டிராகன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கோவை கிங்ஸ் அணியின் கங்கா ஸ்ரீதர் ராஜூ, சுரேஷ் குமார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஸ்ரீதர் ராஜூ 17 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுரேஷ் குமார் 15 பந்தில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். 3-வது வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் சிறப்பான விளையாடினார். அவர் 40 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும். மற்றபடி முகிலேஷ் 17 ரன், வெங்கடராமன் 1 ரன், கேப்டன் ஷாருக் கான் 28 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டும் எடுத்தது.
சிக்ஸர்களை விளாசிய விவேக்
இதையடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணியில் ஓப்பனர் சுரேஷ் 9 ரன்களில் வெளியேறினாலும், கேப்டன் ஹரி நிஷாந்த் கேப்டன் நாக் இன்னிங்ஸை ஆடினார். அவர் 44 பந்துகளில் 59 எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினார். இறுதியில் ஆர் விவேக், 26 பந்துகளில் 52 ரன்கள் விளாச 17.3வது ஓவரிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. விவேக் 6 சிக்ஸர்களை நொறுக்கி அரைசதம் அடித்தார்.
2வது வெளியேற்றுதல் சுற்று
இதையடுத்து, நாளை (ஆக.13) நடைபெறும் மற்றொரு வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் நேற்று வெற்றிப் பெற்ற திண்டுக்கல் அணியும், தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றிப் பெறும் அணி, வரும் ஆக.15ம் தேதி சுதந்திர தினத்தன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியுடன் மோதவுள்ளது.