திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசனின் பைனலுக்கு முன்னேறியது திண்டுக்கல் அணி. நேற்று நடந்த முதல் குவாலிபையர் போட்டியில் மதுரை அணியை 75 ரன்களில் வென்றது திண்டுக்கல்.
டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசன் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. நேற்று நடந்த முதல் குவாலிபையர் ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சியாசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. ஹரி நிஷாந்த் 57, என். ஜெகதீசன் 43, ஆர். விவேக் 54, அனிருத் சீதாராம் 22 ரன்கள் எடுத்தனர். மதுரையின் ஜெகன்னாத் ஸ்ரீனிவாஸ், 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய மதுரை அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. மதுரையின் அபிஷேக் தன்வார் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். திண்டுக்கல் அணியின் மொகம்மது 3, திரிலோக் நாத், அபினவ் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதன் மூலம் 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, முதல் முறையாக பைனலுக்கு முன்னேறியது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும் மதுரை அணிக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. இன்று நடக்கும் இரண்டாவது குவாலிபையரில் லைகா கோவை கிங்ஸ் அணியை சந்திக்கிறது. அதில் வெற்றி பெறும் அணிகளே பைனலுக்கு முன்னேறும். பைனல் 12ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.