டோமினிக்கா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா கேப்டன்சி சிறப்பாக இருந்ததாக தினேஷ் கார்த்திக் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெயிட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய சுழற்பந்துவீச்சாளர்களான அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதற்கு ரோகித் சர்மாவின் சிறப்பான கேப்டன்சியும் காரணமாக அமைந்துள்ளது.

இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் சாதகம் என்றாலும், முதல் ஸ்பெல் முடிவடைந்த பின், உடனடியாக அஸ்வினை அட்டாக்கில் கொண்டு வந்தார் ரோகித் சர்மா. புதிய பந்தில் துல்லியமாக ஸ்பின் செய்த அஸ்வின் தொடக்க வீரர்களான தேஜ்நரைன் சந்தர்பால் மற்றும் பிராத்வெயிட் இருவரையும் காலி செய்தார். இருப்பினும் அறிமுக வீரர் அதனேஸ் - ஹோல்டர் கூட்டணி 6வது விக்கெட்டுக்கு சிறப்பாக ஆடியது.
6வது விக்கெட்டுக்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த நிலையில், ஆடுகளத்தில் சிறிய அளவில் பவுன்ஸ் இருப்பதை உணர்ந்து இருவருக்கும் சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூரை வைத்து ஷார்ட் பால்களை வீச அறிவுறுத்தினார் ரோகித் சர்மா. அதில் சிராஜ் வீசிய ஷார்ட் பாலில் ஹோல்டர் ஆட்டமிழக்க, பின்னர் மீண்டும் அஸ்வின் - ஜடேஜா ஆட்டத்தை முடித்து காட்டினர். முதல் நாள் ஆட்டம் முடிவடைந்த பின் அஸ்வின் மற்றும் ஜெய்ஸ்வாலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் ரோகித் சர்மாவின் கேப்டன்சியை புகழ்ந்து தள்ளியுள்ளார். அதில் தினேஷ் கார்த்திக் பேசுகையில், இரு செட் பேட்ஸ்மேன்களை வீழ்த்துவதற்காக ரோகித் சர்மா மாஸ்டர் பிளானுடன் வந்தது ஆச்சரியமளித்தது. ஹோல்டர் மற்றும் அதனேஸ் பார்ட்னர்ஷிப் உருவாகுவதை உணர்ந்து உடனடியாக ஷார்ட் திட்டத்துடன் சிராஜை அட்டாக்கில் கொண்டு வந்தார் ரோகித் சர்மா. அவர் திட்டமும் சரியாக களத்தில் எடுபட்டது.
ஹோல்டர் ஃபைன் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின்னர் ஸ்பின்னர்கள் எளிதாக விக்கெட்டை வீழ்த்தினர் என்று பாராட்டியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பின் ரோகித் சர்மா கேப்டன்சி மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் ரோகித் சர்மா கேப்டன்சியில் முன்னேற்றமடைந்து வருவது பாராட்டை பெற்று வருகிறது.