லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கடைசி நாளில் இந்திய அணி வெற்றி பெற 280 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த நிலையில் களத்தில் விராட் கோலியும் ரகானேவும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் விராட் கோலி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார். ஆர் சி பி அணியில் இருக்கும் போது தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங் செய்ய சில போட்டிகளில் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் விராட் கோலி மீது ஏற்பட்டுள்ள கோபம் காரணமாக அவர் இப்படி பேசுகிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு கிடையாது என்று தான் எனக்கு தெரிகிறது. இது நிச்சயமாக ரசிகர்களுக்கு சோகத்தை அளிக்க கூடிய செய்தி தான். நான் இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை.
ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஆடுகளம் கடைசி நாளில் கடினமாக மாறிவிடும். ஒரு பேட்ஸ்மேன் இங்கு 60 முதல் 70 ரன்கள் எடுப்பதே மிகவும் கஷ்டமாக மாறிவிடும். ஆடுகளத்தில் வீசப்படும் சில பந்துகளை உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. இந்திய அணியின் இந்த இக்கட்டான நிலைக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்கள் நடந்தது காரணம் அல்ல.
ஆனால் முதல் நாளில் நாம் மிகவும் மோசமான முறையில் பந்து வீசினோம். அதுதான் தற்போது நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய அணியை 469 ரன்கள் அடிக்க விட்டதெல்லாம் மிகவும் தவறு. அவர்கள் 200 ரன்களுக்கு மேல் அதிகமாக அடித்து விட்டார்கள். தற்போது ஆடுகளத்தின் பந்து எழும்பும் உயரமும் குறைய தொடங்கிவிடும். இதன் காரணமாக இந்திய அணி பேட்ஸ்மேன்கள் எல் பி டபிள்யூ அல்லது போல்ட் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.