மும்பை: 5 ஐபிஎல் கோப்பையை வென்ற ரோகித் சர்மாவால் டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு கூட அழைத்து செல்ல முடியாமல் போனது ஏமாற்றம் அளிப்பதாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமையுடன் கேப்டன்சிக்கு கொண்டு வரப்பட்ட ரோகித் சர்மா, அடுத்தடுத்து ஐசிசி தொடர்களிலும், வெளிநாட்டு தொடர்களிலும் சொதப்பி வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடருக்கு பின் கேப்டன்சியில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்று ரசிகர்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில், ஒரு கேப்டனாக ரோகித் சர்மாவிடம் இருந்து சற்று அதிகம் எதிர்பார்த்தேன். இந்திய மண்ணில் வெற்றிபெறுவது சாதாரணம். உண்மையான பரீட்சை வெளிநாடுகளில் வெல்வதுதான். வெளிநாட்டு மண்ணில் தான் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு டி20 கிரிக்கெட்டை மட்டும் பார்த்தாலும், ரோகித் சர்மா சொல்லிக் கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை.
100க்குள் அதிகமான ஐபிஎல் போட்டிகளில் கேப்டன்சி செய்து கிடைத்த அனுபவம் இருந்தும் ரோகித் சர்மா, டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு கூட கூட்டிச் செல்லவில்லை. அதேபோல் ஐசிசி தொடர்களில் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரும் எடுக்கும் முடிவுகளுக்கு நிச்சயம் தேர்வுக் குழுவினர் விளக்கம் கேட்க வேண்டும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என்று பார்த்தால், முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது ஏன் என்று கேட்க வேண்டும்? டிராவிஸ் ஹெட் களமிறங்கும் போதே ரிக்கி பாண்டிங் பவுன்சர் வீச வேண்டும் என்று வர்ணனையில் கூறுகிறார்.

ஆனால் 80 ரன்களுக்கு பின்னரே டிராவிஸ் ஹெட்டிற்கு இந்திய வீரர்கள் பவுன்சர் வீசுகிறார்கள். இதற்கான காரணத்தை ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் ஆகியோரிடம் கேள்வி எழுப்பப்பட வேண்டும். அதேபோல் தோல்விக்கு பின் ரோகித் சர்மா 20 நாட்களாவது தயாராவதற்கு நேரம் வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் என்ன மாதிரி தயாராக நேரம் தேவை என்று அவர் சொல்லவில்லை. ஒவ்வொரு தொடருக்கும் 15 நாட்கள் முன்னதாக சென்று பயிற்சிப் போட்டிகளில் விளையாட வேண்டும். அதில் ஜூனியர் வீரர்கள் களமிறக்கப்பட்டு வாய்ப்பு வழங்க வேண்டும்.
அப்போது தான் அவர்களின் திறமை வெளிவரும் என்பதோடு, சீனியர் வீரர்களுக்கும் பொறுப்பு வரும். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் முன்னதாக வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு சென்று பயிற்சி மேற்கொள்ள சீனியர் வீரர்களுக்கு விருப்பமில்லை. ஏனென்றால் அவர்கள் எப்படி விளையாடினாலும் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் வேலைப்பளு பற்றி பேசுகிறார்கள். டி20 போட்டிகளில் விளையாடுவதால் வேலைப்பளு அதிகரிக்கும் என்று சொல்வது ஏற்புடையதல்ல என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.