லண்டன்: இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில்லை ஜாம்பவான் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்றோருடன் ஒப்பிட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட்டா அல்லது ப்ரித்வி ஷா-வா என்று ரசிகர்கள் விவாதம் நடத்தி வந்த நிலையில், அவுட் ஆஃப் சிலபஸாக வந்து அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளார் சுப்மன் கில். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலேயே அறிமுகமாகினாலும், சுப்மன் கில் நடப்பாண்டில் தான் உச்சத்திற்கு வந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம், டி20 கிரிக்கெட்டில் சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம், ஐபிஎல் தொடரில் 3 சதங்கள் என்று கற்பனைக்கு எட்டாத ஆட்டத்தை ஆடி வருகிறார்.

அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் மட்டும் 890 ரன்களை குவித்து அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்துள்ளார் சுப்மன் கில். இதனால் இந்திய அணியின் 3 வகையான கிரிக்கெட்டுக்குமான தொடக்க வீரராக உருவெடுத்துள்ளார். இதனால் சுப்மன் கில்லை ரசிகர்கள், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோருடன் ஒப்பிட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஜெனரேஷனுக்கு ஒரு பேட்டிங் ஜீனியஸை இந்திய அணி உருவாக்கி கொடுக்கும். அந்த வகையில் இளம் பேட்டிங் ஜீனியஸாக சுப்மன் கில் கொண்டாடப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான கேரி கிறிஸ்டன், சுப்மன் ஒரு திறமை வாய்ந்த இளம் வீரர். சிறப்பாக ஆடி வருகிறார். அவரை சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரர்களுடன் ஒப்பிடுவது தேவையில்லாத ஒன்று. 3 வகையான போட்டிகளுக்கான இந்திய அணியில் ஆடவுள்ள திறமையான வீரராக இருக்கிறார்.

டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சியால், தற்போது 3 ஃபார்மட்டுக்குமான பிளேயர்கள் வருவது குறைந்துள்ளது. சுப்மன் கில்லிடம் மாபெரும் வீரராக வருவதற்கான திறமைகள் உள்ளது. ஆனால் அனைத்து வீரர்களை போல் அவருக்கும் சோதனைகள் வரும். அந்த சோதனைகளை எப்படி சமாளித்து எழுகிறார் என்பதில் தான் சுப்மன் கில்லின் கிரிக்கெட் வாழ்க்கை அமையும். அதற்காக அவரை தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.