மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் தமது மகன் அர்ஜூனுக்கு சில அறிவுரைகளை கூறி இருக்கிறார்.
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மாபெரும் கிரிக்கெட் வீரர். கிரிக்கெட் உலகில் காலத்தால் அழியாத வரலாறுகளை படைத்த அவர், 24 ஆண்டுகள் அசைக்க முடியாத ஜாம்பவானாக வலம்வந்தவர்.
அதிக சதங்கள், அதிக ரன்கள் என அவருக்கு சொந்தமான சாதனைகள் ஏராளம். இந்திய அணியின் மிக பெரிய தூண். சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் கிரிக்கெட் வீரராகவே உருவெடுத்துள்ளார். மும்பை டி 20 லீக் தொடரில் ஆகாஷ் டைகர்ஸ் அணிக்காக அவர் ஆடிவருகிறார்.
பொதுவாக கிரிக்கெட் வீரர்களின் வாரிசுகளும் கிரிக்கெட் வீரராக இருந்தால் அணியில் எளிதாக வாய்ப்பு கிடைத்துவிடும். மற்ற வீரர்களின் வாரிசுகளுக்கே அப்படியென்றால், சச்சின் டெண்டுல்கரின் மகன் என்றால் சொல்லவா வேண்டும். ஆனால், அந்த கருத்துகளை தகர்க்கும் வகையில் இருக்கிறது சச்சினின் நடவடிக்கைகள்.
தமது மகனுக்கு அவர் சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். அதுபற்றி சச்சின் கூறியிருப்பதாவது: கிரிக்கெட் விளையாடியே ஆக வேண்டும் என்று தனது மகனை வற்புறுத்தியதில்லை. மேலும், வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் குறுக்கு வழியை மட்டும் தேர்வு செய்து விடக் கூடாது.
எனக்கு தனது தந்தை கூறிய அறிவுரையாகும். இதே அறிவுரையை தற்போது எனது மகனுக்கு சொல்லி இருக்கிறேன். கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற பலன் கிடைத்தே தீரும் என்று மகனிடம் கூறி இருப்பதாகவும் சச்சின் தெரிவித்துள்ளார்.