டெல்லி: உலகக்கோப்பைத் தொடருக்கான கதவுகள் அஸ்வின், சாஹல், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட எந்த வீரருக்கும் மூடப்படவில்லை என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. மொத்தமாக 17 பேர் கொண்ட அணியில் 7 மும்பை வீரர்கள் இருக்கிறார்கள். அதனை கடந்து பார்த்தால், இந்திய அணியின் ஆஃப் ஸ்பின்னர் இல்லை. அதேபோல் சைனா மேன் பவுலரான குல்தீப் யாதவ் மட்டுமே நல்ல ஸ்பின்னர் என்ற சொல்ல முடியும். அதேபோல் 6 வேகப்பந்துவீச்சாளர்கள் ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முழுமையான ஃபிட்னஸ் இல்லாத கேஎல் ராகுல், மாற்று வீரராக சஞ்சு சாம்சன், திலக் வர்மா அறிமுகம் என்று எக்கச்சக்க குழப்பங்களை இந்திய அணி மீண்டும் அரங்கேற்றியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாற்று வீரர் உட்பட 18 வீரர்களில் தான் உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்று தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.
இதனால் ஆஃப் ஸ்பின்னரான அஸ்வினுக்கான உலகக்கோப்பை கனவு முடிவுக்கு வந்துள்ளதாக ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இதுகுறித்து ரோகித் சர்மா பேசுகையில், தேர்வுக் குழு கூட்டணித்தில் ரவிச்சந்திரன் அஸ்வின், சாஹல், வாஷிங்டன் சுந்தர் என்று அனைவர் குறித்தும் விவாதித்தோம். அதேபோல் ஆஃப் ஸ்பின்னரா அல்லது லெக் ஸ்பின்னரா என்ற விவாதமும் நடைபெற்றது.

அதேபோல் இந்திய அணிக்கு நீண்ட பேட்டிங் வரிசை வேண்டுமென்றும் நினைத்தோம். அதனால் அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவர் இடதுகை பேட்ஸ்மேன் என்பதால், அவரை எந்த இடத்திலும் களமிறக்கி ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய முடியும் என்று கருதினோம். 17 வீரர்கள் மட்டும் என்பதால் மட்டுமே சாஹல், அஸ்வின் சேர்க்கப்படவில்லை.
அதேபோல் 18 வீரர்களில் இருந்தே உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணி தேர்வு இருக்கும் என்று சொல்ல முடியாது. ரவிச்சந்திரன் அஸ்வின், சாஹல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என்று யாருக்கும் உலகக்கோப்பைத் தொடருக்கான கதவுகள் அடைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.