துபாய் : ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே இந்திய அணி ஒரு ரிவியூவை வீணடித்தது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, பாபர் அசாம், ரிஸ்வான் ஜோடியை பிரிக்கும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் களமிறங்கினர்.
இதற்கு காரணம், கடந்த டி20 உலகக் கோப்பையில் இந்த ஜோடியால் தான் இந்திய அணி தோற்றது. இதனால், இவர்களை வீழ்த்தனால், பாதி வேலை முடிந்தது.
இதனையடுத்து, முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இதில் முகமது ரிஸ்வானுக்கு இன்ஸ்விங் பந்தை புவனேஸ்வர் குமார் வீச, முகமது ரிஸ்வானுக்கு எல்பிடபிள்யூ தரப்பட்டது. ஆனால், அவர் டிஆர்எஸ் மூலம் மூன்றாம் நடுவரின் உதவியை நாடினார். அப்போது, அது அவுட் இல்லை என தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து முதல் ஓவரின் கடைசி பந்தில் ஒரு சம்பவம் நடந்தது. இதில், புவனேஸ்வர் குமார் அவுட்ஸ்விங் பந்தை வீசினார். அதனை அடிக்க ரிஸ்வான் முயன்ற போது பந்து பேட்டில் பட்டது போல் தெரிந்ததால், இந்திய அணி அவுட் கேட்டது. அதற்கு கள நடுவர் தரவில்லை. இதனால் மூன்றாம் நடுவரின் உதவி நாடப்பட்டது.
அப்போது, ரிப்ளேவில் அது நாட் அவுட் என தெரியவந்ததால், இந்தியாவின் ஒரு ரிவியூ வீணானது. எனினும் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து கட்டுக்கோப்பாக பந்துவீசினர். இதனால், ஆட்டத்தின் டாட் பால் அதிகரித்தது. இதனையடுத்து புவனேஸ்வர் குமார் வீசிய ஷாட் பாலை அடிக்க முயன்ற பாபர் அசாம் , 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பாகிஸ்தான் 15 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.